அதெப்படி மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கலாம்? பழ. நெடுமாறன் திடீர் கண்டனம்
சென்னை: கிராம சபை கூட்டங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றது தவறான முன் உதாரணம் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பழ. நெடுமாறன் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் காந்தியடிகள் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி அன்று கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும். கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றாகக் கூடி ஊராட்சி மன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் மக்களின் பிரச்சனைகள் குறித்து, விவாதித்து முடிவுகள் எடுக்கப்படுவது வழக்கம்.
இக்கூட்டங்களில் வெளியாட்கள் பங்கேற்றால் கூட்டத்தின் நோக்கமே சிதைந்து போகும். இந்த மரபை மீறும் வகையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கிராமசபை கூட்டங்களில் பங்கேற்றுப் பேசியது சனநாயக முறைகளை மதிக்காதப் போக்காகும்.
தடையை மீறி கிராம சபை கூட்டம்.. ஸ்டாலின் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் - திருவள்ளூர் எஸ்.பி
இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். மேலும், இவ்வாண்டு கொரோனா தொற்று நோய் காரணமாக கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஸ்டாலின் விரும்பினால், தனது கட்சிக்காரர்களுடன் தனியே ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்க வேண்டுமே தவிர, கிராம சபை கூட்டங்களில் பங்கேற்றுயிருப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும். இவ்வாறு பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.