1 இன்ச் விடாதீங்க.. தெருவில் இறங்கிய டாப் அதிகாரிகள்.. மொத்தமாக தூக்க போறாங்க.. கவனமாக இருங்க!
சென்னை: சென்னைவாசிகளின் பிரதான நரம்பாக இருக்கும் ஜி.எஸ்.டி சாலை, இப்போது ஆக்கிரமிப்பாளர்களின் 'சொந்த' இடமாக மாறிப்போயிருக்கிறது. குறிப்பாக தாம்பரம் சானடோரியம் முதல் பல்லாவரம் வரையிலான நடைபாதைகள், பாதசாரிகளுக்காகப் போடப்பட்டதா அல்லது தள்ளுவண்டி கடைகளுக்காகப் போடப்பட்டதா என்கிற சந்தேகம் எழும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.

தள்ளுவண்டிகளின் ராஜ்யம்!
ஜி.எஸ்.டி சாலையின் இருபுறமும் தள்ளுவண்டி உணவகங்கள், பங்க் ஷாப்கள் மற்றும் சிறிய கடைகள் என வரிசையாக ஆக்கிரமிப்புகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அவ்வப்போது மாநகராட்சி அதிகாரிகள் வந்து 'எவிெக்ஷன் டிரைவ்' நடத்தினாலும், அதிகாரிகள் சென்ற அடுத்த சில மணி நேரங்களிலேயே மீண்டும் கடைகள் முளைத்துவிடுகின்றன.
இந்த கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, தாம்பரம் மாநகராட்சி இப்போது களம் இறங்கியுள்ளது. மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 12 கி.மீ நீள ஜி.எஸ்.டி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டுள்ளது. சுமார் 300 கடைகளுக்கு "உடனே காலி செய்" என உத்தரவிடப்பட்டுள்ளது.
96 லட்ச ரூபாய் திட்டம்: என்னென்ன மாற்றங்கள்?
வெறுமனே அகற்றுவதோடு நின்றுவிடாமல், அந்தப் பகுதியை அழகுபடுத்தவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதிகாரிகள் தரப்பில் பேசியபோது:
"ரூ.96 லட்சம் செலவில் நடைபாதைகள் முழுவதும் 'பேவர் பிளாக்' கற்கள் பதிக்கப்படும்."
"நவீன தெருவிளக்குகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்."
"நடப்பதற்குத் தடையற்ற, பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே எங்களின் நோக்கம்," என்றனர்.
"பராமரிப்பு இல்லையென்றால் இதுவும் வீண்!" - குமுறும் மக்கள்
அரசின் இந்தத் திட்டத்தை மக்கள் வரவேற்றாலும், பழைய அனுபவங்கள் அவர்களை பயமுறுத்துகின்றன. கணேஷ் நகர் மக்கள் நம்மிடம் பேசுகையில்,
"ஏற்கெனவே குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் செய்யப்பட்ட அழகுபடுத்தும் பணிகள் இப்போது அலங்கோலமாகக் கிடக்கின்றன. செடிகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் புதர்போல மண்டிவிட்டன. இது ஒரு 'கண் துடைப்பு' வேலையாக இருக்கக் கூடாது. முதலில் விற்கும் மண்டலம் (Vending Zone), விற்கக் கூடாத மண்டலம் எனத் தனித்தனியாகப் பிரித்து அறிவிக்க வேண்டும்," எனத் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்கின்றனர்.
சுகாதாரச் சீர்கேடு: அதிகாரிகள் கவனிப்பார்களா?
மற்றொரு முக்கியப் புகாரை முன்வைக்கிறார்கள் குரோம்பேட்டை மக்கள். "ராதா நகர் போன்ற பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட துரித உணவகங்கள் நடைபாதையிலேயே இயங்குகின்றன. மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பயங்கரக் கூட்டம் கூடுகிறது. மிக அசுத்தமான சூழலில் உணவு தயாரிக்கப்படுகிறது. போக்குவரத்து காவல்துறைக்கு புகார் அளித்தும் பலனில்லை. உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இங்கு எப்போது விசிட் அடிப்பார்கள்?" என அவர் கேள்வி எழுப்புகிறார்.
தற்போதுள்ள ஆக்கிரமிப்புகளால் மக்கள் உயிருக்கு அஞ்சியபடி பிரதான சாலையில் வாகனங்களுக்கு இடையே நடக்க வேண்டியுள்ளது.
விபத்து குறைப்பு: 300-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதால், பாதசாரிகள் சாலையிலிருந்து விலகி, தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட பாதுகாப்பான பாதையில் தடையின்றி நடக்க முடியும்.
தொடர்ச்சியான பாதை: கடைகள் மற்றும் பங்க் ஷாப்கள் இல்லாததால், பாதையில் எங்கும் ஏறி இறங்க வேண்டிய அவசியம் இருக்காது. உடைந்த நடைபாதைகளும், கரடுமுரடான தரைத்தளமும் முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பெரும் சவாலாக உள்ளன.
பேவர் பிளாக் கற்கள்: சமமான மற்றும் வழுக்காத 'பேவர் பிளாக்' கற்கள் பதிக்கப்படுவதால், மழைக்காலத்திலும் நீர் தேங்காமல் மக்கள் வசதியாக நடக்க முடியும்.
சமமான தளம்: 12 கி.மீ நீளத்திற்கும் ஒரே சீரான நடைபாதை அமைக்கப்படுவது நடப்பதை எளிதாக்கும். மாநகராட்சியின் இந்த 'சுத்திகரிப்பு' நடவடிக்கை வெறும் 'நோட்டீஸ்' உடன் நின்றுவிடுமா அல்லது நிஜமாகவே ஜி.எஸ்.டி சாலை சிங்காரச் சாலையாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications