பென்ஷன் திட்டத்தில் எது பெஸ்ட்? அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்ட கருத்து கேட்பு கடைசி கூட்டம்
சென்னை: 6 மாதங்களுக்கு பிறகு ககன்தீப் சிங் பேடி குழு விழித்துக் கொண்டதாகவும், விரைவில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த அறிவிப்பை இந்த செப்டம்பர் மாதத்துக்குள் தமிழக அரசு வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.. இந்நிலையில், ஓய்வூதிய திட்ட கருத்து கேட்பு குறித்த தேதி தற்போது வெளியாகியிருக்கிறது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கடந்த 1.4.2003 முதல் ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதை, அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் 22 வருடங்களாக கடுமையாக எதிர்த்து போராடி வருகின்றன.

அரசு ஊழியர்கள் சம்பளம்
தமிழ்நாட்டில் கடந்த 2004 ஜனவரி 1க்கு பிறகு, பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் கட்டாயமாக்கப்பட்டது. இதில் அரசு ஊழியர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்து, பங்குச்சந்தை முதலீடு அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதனால் ஓய்வு பெற்ற பிறகு வருமான பாதுகாப்பு இல்லை என்று அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அதனால் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பல்வேறு வடிவங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அத்துடன், திமுக தேர்தல் வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்றும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.
பென்ஷன் திட்டங்களில் எது பெஸ்ட்
இதையடுத்து சிறந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்வதற்காக, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. பென்ஷன் திட்டங்களில் எது சிறந்தது என்பதை முடிவு செய்ய, அரசு தரப்பில் இந்த குழு அமைக்கப்பட்டு உள்ளது.
3 உறுப்பினர்கள் கொண்ட இந்த குழுவானது, 9 மாதத்துக்குள் தன்னுடைய அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. எனவே, இந்த குழுவினர், 4 கட்டங்களாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களிடம் கருத்து கேட்க முடிவெடுத்தனர்.. அதாவது ஆகஸ்ட் 18, 25, செப்டம்பர் 1, 8 என 4 நாட்கள் கருத்துகேட்பு கூட்டம் நடத்த முடிவானது.
கருத்துக்கேட்பு கூட்டங்கள்
அதன்படி கருத்துக்கேட்பு கூட்டங்கள் ஒவ்வொன்றாக நடந்து வருகின்றன.. இதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை கூறிவருகிறார்கள்.. ஒவ்வொரு சங்கத்திலிருந்தும் 2 பேர் வீதம் அனுமதிக்கப்பட்டு, தலா 3 நிமிடங்கள் அவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டும் வருகின்றன.
இதுவரை பல்வேறு கட்டங்களாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களிடம் கருத்து கேட்டு வந்த நிலையில் 5ம் கட்ட கருத்து கேட்பு கூட்டம் நேற்றைய தினம் நடந்தது. கடைசி கட்ட கருத்து கேட்பு கூட்டம் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இந்த குழுவானது, அறிக்கை தாக்கல் செய்வதற்கு, 30ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. கூடுதலாக இரண்டு மாதம் அவகாசம் பெறவும் குழு முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.
ஒரு பைசா கூட கிடைக்கல
இதையடுத்து, தலைமைச் செயலக சங்க மாநில தலைவர் கு.வெங்கடேசன், செயலாளர் சு.ஹரிசங்கர் ஆகியோர் சமர்ப்பித்த அறிக்கையில், "பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது 100 சதவீதம் சாத்தியமே. சிபிஎஸ் திட்டத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள 45,625 பேருக்கு ஒரு பைசாகூட ஓய்வூதியமாக கிடைக்கவில்லை. அரசுக்கு கூடுதல் செலவினம்தான் ஏற்படும். எனவே அத்திட்டத்தை அரசு பரிசீலிக்கக் கூடாது.
சிபிஎஸ் திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களை சேமநல நிதி திட்டத்தில் (ஜிபிஎப்) இணைத்து, அனைவரையும் தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளின்கீழ் கொண்டு வர வேண்டும். சிபிஎஸ் திட்டத்தில் ஏற்கெனவே ஓய்வுபெற்றவர்களுக்கும் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பணிக்கொடை வழங்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர் சங்கம் கேட்ட தீபாவளி பரிசு
சில நாட்களுக்கு முன்பு, தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் பேசியபோது, "பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், 2003ம் ஆண்டு நடைமுறைக்கு வந்ததிலிருந்தே அதை எதிர்த்து போராடி வருகிறோம். பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய, ஜெயலலிதா தலைமையிலான அரசு, சாந்தா ஷீலா நாயர் தலைமையில் குழு அமைத்தது; அவர் அறிக்கை கொடுக்கவில்லை.
இதையடுத்து, இன்னொரு IAS அதிகாரி ஸ்ரீதர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவும் அறிக்கை சமர்ப்பிக்காமல் இருந்தது. 2017ல் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது; நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது; ஆனால், அந்த அதுதொடர்பாக அறிக்கை இன்று வரை வெளியிடப்படவில்லை.
இப்போது, ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.. காலம் கடத்தாமல், செப்டம்பர் மாதத்திற்குள் இந்த குழுவினர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். தமிழக அரசும் இதே வேகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தும் அறிவிப்பை, தீபாவளி பரிசாக வெளியிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications