சாதி பெயரை நீக்கும் அரசாணை.. தேன் கூட்டில் கையை வைப்பது போல்.. தமிழக அரசு கூறியது என்ன
சென்னை: உள்ளாட்சி அமைப்புகளின் குடியிருப்புகள், சாலைகள், தெருக்கள், பஸ் நிலையங்கள், சந்தைகள் போன்ற சொத்துக்களின் பெயர்கள் ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது பிரிவைச் சார்ந்த மக்களையும், அவர்களது உணர்வுகளையும் இழிவுபடுத்துவதாக அல்லது பாகுபாடு காட்டும் வகையில் அமைந்துள்ளதா என்பதை அறிந்து நீக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த அரசாணை தற்போது பலராலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. இதனால் தேன் கூட்டில் கையை வைத்தது போல் சிக்கலான நிலையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த அக்டோபர் 8ம் தேதி என்று தமிழ்நாடு அரசு ஒரு அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையில் , " உள்ளாட்சி அமைப்புகளின் குடியிருப்புகள், சாலைகள், தெருக்கள், பஸ் நிலையங்கள், சந்தைகள் போன்ற சொத்துகள் மற்றும் நீர்நிலைகள் போன்ற பொது உட்கட்டமைப்புகளின் பெயர்கள் ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது பிரிவைச் சார்ந்த மக்களையும், அவர்களது உணர்வுகளையும் இழிவுபடுத்துவதாக அல்லது பாகுபாடு காட்டும் வகையில் அமைந்துள்ளதா? என்பதையும் குறித்து மதிப்பிடும் வகையில் பெயர்கள் தொடர்பாக விரிவான பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

குடியிருப்புகள், சாலைகள், தெருக்கள், பொதுவான சொத்துகள் ஆகியவற்றை பட்டியலிட்ட பிறகு, அத்தகைய பெயர்களை பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடையே நிலவும் சூழ்நிலையை, குறிப்பாக உள்ளூர் மக்களின் கருத்து-பதில்களை பொறுத்து மதிப்பிட வேண்டும். மேற்குறிப்பிட்ட பெயர்களை தொடர்வதில் களத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றால், பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அவை ஒரு பிரிவினரை இழிவுபடுத்தும் விதமாகவும், உள்ளூர் மக்களும் மாற்றத்தை கோரினால், அந்தப் பெயர்கள் பொதுவான பெயர்களாக மாற்றப்பட வேண்டும்.
சில பெயர்கள் - பிரிவுகள் அவசியம் மாற்றப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக ஆதிதிராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம், பறையர் தெரு, சக்கிலியர் சாலை போன்றவை தவிர்க்கப்பட வேண்டிய பெயர்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பொது-சாதிச்சார்பற்ற தன்மை கொண்ட புதிய பெயருடன் பெயரை மாற்றலாம். பொதுமக்கள் ஏற்கனவே உள்ள பெயர்களை மாற்ற விரும்பவில்லை என்றால் அந்த பெயர்களை மாற்ற வேண்டிய அவசியமில்லை. இது மிகுந்த கவனத்துடன் கையாளப்பட வேண்டும்" இவ்வாறு அரசாணை வெளியிடப்பட்டது.
அத்துடன் தமிழக அரசு நீக்கப்படும் பெயர்களுக்கு பதிலாக வைக்க வேண்டிய புதிய பெயர்களை எடுத்துகாட்டாக அறிவித்துள்ளது. அதன்படி குளம் மற்றும் நீர்நிலைகளுக்கு ரோஜா, மல்லி, செம்பருத்தி, சூரியகாந்தி, சாமந்தி, தாழம்பூ, காந்தள், கனகாம்பரம், கொன்றை, மகிழம்பூ, முல்லை, செண்பகம், குவளை, குறிஞ்சி, செவ்வந்தி ஆகிய பெயர்கள் வைக்கலாம். அதேபோல் தெருக்கள் மற்றும் சாலைகளுக்கு திருவள்ளுவர், அவ்வையார், கபிலர், சீத்தலைச் சாத்தனார், நக்கீரர், பிசிராந்தையார், கம்பர், அகத்தியர், வீரமாமுனிவர், பாரதியார், பாரதிதாசன், மகாத்மா காந்தி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, காமராஜர், கலைஞர் ஆகிய பெயர்களை வைக்கலாம் என்றும் தமிழக அரசு பரிந்துரை செய்தது.
அரசு அரசாணையில் ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது பிரிவைச் சார்ந்த மக்களையும், அவர்களது உணர்வுகளையும் இழிவுபடுத்துவதாக அல்லது பாகுபாடு காட்டும் வகையில் அமைந்திருந்தால் நீக்க வேண்டும் என்று தான் கூறப்பட்டிருந்தது. இந்த சூழலில் தமிழக அரசின் அரசாணை பலராலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. எப்படி என்றால், சாதி பெயர்களை நீக்க வேண்டும் என்று பொதுவாக புரிந்து கொள்ளப்பட்டது. அப்படி நீக்குவதாக தெரிந்தால், பல ஊர்களின் பெயர்களை அரசு அதிகாரப்பூர்வமாக மாற்ற வேண்டும். பல ஆயிரம் ஊர்களின் பெயர்கள சாதி பெயருடன் தான் இருக்கும்.
நாயக்கர், தேவர், வன்னியர், கவுண்டர், செட்டியார், பள்ளர், பறையர், அருந்ததியர் என பல்வேறு சாதி பெயர்களில் ஊர்கள் அமைந்துள்ளன. இதை மாற்றுவது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே அரசு, ஊர் பெயர்களை, சாதி தெரு பெயர்களை மொத்தமாக மாற்ற வாய்ப்பு மிகமிக குறைவு.. அப்படி செய்தால் அது தேன் கூட்டில் கை கைப்பது போல், எந்த அரசாக இருந்தாலும் ஆபத்தானது. அதை ஒரு நாளும் எந்த அரசும் செய்ய வாய்ப்பு இல்லை.. அதேநேரம் சாதி பெயர்களில் தான் பல தெருக்கள் அமைந்துள்ளன அவற்றில் தான், மக்களின் உணர்வுகளையும் இழிவுபடுத்துவதாகவோ அல்லது பாகுபாடு காட்டுவதாகவோ இருந்தால் மாற்றலாம் என்று அரசு பரிந்துரைத்துள்ளது. இது ஒன்று மட்டுமே நடைமுறையில் சாத்தியமாக வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications