இந்த பாலியல் காஸ்ட்லி சாமியார்களை விடுங்க.. விதிபடி நடக்கும்னு நம்புங்க.. வாழ்க்கை சிறக்கும்!
சென்னை: பிரேமானந்தா, நித்யானந்தா, ராம் ரஹீம் ஆகிய மோசடி சாமியார்களின் வரிசையில் புதிதாக இணைந்த சிவசங்கர் பாபா.
ஆன்மீகம், சொற்பொழிவு, வாய் ஜாலத்தை வைத்துக் கொண்டு எதையாவது பேசி மக்கள் கூட்டத்தை கூட்டி சாமியார் என்ற போர்வையில் சிலர் அளவுக்கு அதிகமாக சொத்துகளை குவிப்பது, பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்குவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அந்த வகையில் நமக்கு தெரிந்தவர்கள் பிரேமானந்தா, நித்யானந்தா, ராம் ரஹீம், சிவசங்கர் பாபா. இந்த மோசடி சாமியார்கள் அரங்கேற்றிய லீலைகள் என்னவென பார்ப்போம்.
இலங்கை
முதலில் பிரேமானந்தா- இலங்கை மாத்தளையைச் சேர்ந்த பிரேமானந்தா வாயில் திருநீரு கொட்டுவது, சிவலிங்கம் எடுப்பது போன்ற சித்து விளையாட்டுகளை அதிகம் செய்து வந்தார். பிரேமானந்தா ஆசிரமத்தில் தங்கியிருந்த ஆதரவற்ற சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்தது வெளிச்சத்திற்கு வந்தன.
ராம் ரஹீம்
அது போல் நித்யானந்தாவும் பிடதியில் ஆசிரமத்தை வைத்துக் கொண்டு அங்குள்ள பெண் பக்தர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து சிர்சாவில் உள்ள தேரா சச்சா ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் கைது செய்யப்பட்டார்.
போர்வை
அந்த வரிசையில் தற்போது பள்ளியில் படித்து வந்த சிறுமிகளுக்கு பரிசு பொருட்களை கொடுத்து பாலியல் அத்துமீறல்களை நடத்தியதாக அதன் நிர்வாகி சிவசங்கர் பாபா மீது எழுந்த புகாரின்பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது போல் சாமியார்கள் என்ற போர்வையில் பாலியல் அத்துமீறல்கள் பெருகி வருவது வேதனைக்குரியதாக உள்ளது.
யாசகம்
அந்த காலத்தில் ரிஷிகள் யாசகம் கேட்டு தங்கள் வாழ்க்கையை கடத்தி வந்ததாக அவர்களின் வாழ்க்கை வரலாறு கூறுகின்றன. அவர்கள் வாழும் வரை எந்த சொகுசு வாழ்க்கையையும் வாழாதவர்கள். இது போன்ற மகான்கள், யோகிகள் , சித்தர்கள் பலதரப்பட்ட மதங்களில் வாழ்ந்து மக்களுக்கு நன்மை செய்துவிட்டு இன்னும் மக்கள் மனங்களில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் விளையாடும் சித்து விளையாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாகவும் மக்களின் அறிவை வளர்த்துக் கொள்வதாகவும் இருந்ததே தொழிய திருநீறு எடுப்பது, லிங்கம் எடுப்பது போன்ற தந்திரங்களை செய்யவில்லை.
சாமியார்கள்
ஆனால் நாம் மேலே குறிப்பிட்ட மோசடி சாமியார்களோ ஆசிரமம் நடத்துவது, பள்ளி நடத்துவது என பணம் கொழிக்கும் தொழில்களையே செய்து வந்தனர். இவர்கள் வழங்கும் ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்டால் மனம் லேசாவதாக இவரது பக்தர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் இவர்களை விட எத்தனையோ நல்ல கருத்துகளை பல துறவிகள் வழங்கியுள்ளனர்.
விபூதி
இதையெல்லாம் விடுத்து "சுவாமிகள்" வாயில் இருந்து எடுக்கும் லிங்கத்திற்கும் விபூதிக்கும் ஆசைப்பட்டு அவர்களை பின்தொடர்ந்தால் பாலியல் குற்றங்கள் அதிகரிக்கத்தான் செய்யும். இது போன்ற சாதாரண நபர்களை நாமே வளர்த்துவிட்டுவிட்டு இன்று குய்யோ முய்யோ என அடித்துக் கொள்வதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது?
மதி
விதியை மதியால் வெல்லலாம் என்றாலும் நாம் பிறக்கும் போது தலையில் என்ன எழுதிவைத்துள்ளானோ அதுபடிதான் நடக்கும் என்பதை முதலில் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதை யார் நினைத்தாலும் மாற்ற முடியாது. இனியாவது இது போன்ற காஸ்ட்லி சாமியார்களை புறந்தள்ளிவிட்டு விதிபடி நடக்கட்டும் என்ற போக்கில் போனால் மட்டுமே இனி மோசடி சாமியார்கள் முளைப்பது தடுக்கப்படும்.