‛‛கருப்பு எம்ஜிஆர்’’.. விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தில் மக்கள் செலுத்திய நன்றி.. இது தான் பிரியாவிடை
சென்னை: சென்னை தீவுத்திடலில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு விஜயகாந்தின் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட நிலையில் மேம்பாலத்தில் நின்றபடி மக்கள் பெரிய பெரிய கவர்களில் பூக்களை எடுத்து வந்து தூவி வழியனுப்பி வைத்த சம்பவம் அனைவரையும் கண்கலங்க செய்தது.
நடிகர், அரசியல்வாதி, தேமுதிகவின் தலைவர், முன்னாள் எம்எல்ஏ, முன்னாள் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் என பல்வேறு பரிணாமங்களில் மக்களை கவர்ந்தவர் விஜயகாந்த். உடல்நலக்குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் நேற்று காலமானார்.

இதையடுத்து நேற்று விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்திலும், இன்று காலை முதல் தீவுத்திடலில் அவரது உடல் வைக்கப்பட்டு இருந்தது. ஏராளமான மக்கள் நீண்டவரிசையில் காத்து நின்று விஜயகாந்துக்கு பிரியா விடை கொடுத்தனர்.
இதையடுத்து இன்று மாலை சுமார் 3 மணிக்கு விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. உடல் வைக்கப்பட்ட வாகனத்தில் மனைவி பிரேமலதா, 2 மகன்கள் மற்றும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இருந்தனர். இதையடுத்து வாகனத்தின் முன்பும், பின்பும் மக்கள் அதிகளவில் நடந்து செல்ல தொடங்கினர். சாலையின் இருபுறமும் மக்கள் வெள்ளம் போல் திரண்டு நின்று விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதனால் விஜயகாந்தின் உடலை ஏற்றி செல்லும் வாகனம் இன்ச் இன்ச்சாக மட்டுமே நகர்ந்தது. அதோடு சென்னை சாலையில் விஜயகாந்தின் உடலை எடுத்து சென்ற வாகனத்தை பார்த்த மக்கள் பெரிய பெரிய கவர்களில் பூக்களை கொண்டு வந்து தூவி விஜயகாந்தை வழியனுப்பினர். விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் முழுவதும் அவர் மீதான பாசத்தை மக்கள் பூக்கள் தூவி வெளிக்காட்டினர்.
இதனை பார்த்தவுடன் விஜயகாந்தின் 2 மகன்களும் கண்கலங்கினர். விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்ட வாகனத்தில் நின்று சென்ற அவர்கள் 2 பேரும் பொதுமக்களை பார்த்து கண்ணீர் மல்க கையெடுத்து கும்பிட்டு நன்றி செலுத்தினர். இறுதி ஊர்வலமான கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் முடிய உள்ளது. அதன்பிறகு இறுதி சடங்குகளுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications