இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு.. தந்தை பெரியாரின் பிறந்தநாள் இன்று! தலைவர்கள் புகழாரம்!
சென்னை: பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 147வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு இனப்பகையை சுட்டெரிக்கும் பெரும் நெருப்பு என புகழாரம் சூட்டியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும் உணர்வுகளை தட்டி உழுப்பி உரிமைக்காக போராடியவர் பெரியார் என கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி.
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் ஈரோடு மாவட்டத்தில் வெங்கட்ட நாயக்கர் சின்னத்தாயம்மாள் தம்பதியருக்கு 17.9.1879 அன்று மகனாகப் பிறந்தார். சாதியப் பாகுபாட்டினைக் கண்டு வெகுண்டெழுந்து சமூக நீதி காத்திடவும், மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இல்லை, ஆணும் பெண்ணும் சரி நிகர் சமம் என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டும், சாதி ஒழிப்பு. பெண் அடிமைத்தனம் ஒழிப்பு ஆகியவற்றிற்காகத் தொடர்ந்து போராடினார்.
1924ஆம் ஆண்டு கேரள மாநிலம் வைக்கத்தில் தீண்டாமைக்கு எதிராகப் போராடியதால் "வைக்கம் வீரர்" என்று மக்களால் அழைக்கப்பட்டார். இந்திய வரலாற்றிலேயே தீண்டாமையையும், சாதிக் கொடுமையையும் எதிர்த்து முதன் முதலாக நடைபெற்ற போராட்டம் என்ற சிறப்பை வைக்கம் போராட்டம் பெற்றது.

தந்தை பெரியார்
தந்தை பெரியார் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாய்த் திகழ்வதற்கு வழிகாட்டி, தனது இறுதி மூச்சு வரை சுயமரியாதைக் கொள்கைக்காகவே வாழ்ந்தார். தமிழ்நாட்டில் சமூக மாற்றத்தை உருவாக்கி, மக்களிடையே ஒற்றுமையை வளர்த்து, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்படப் பெரும்பங்காற்றினார். தந்தை பெரியார் அவர்கள் படிப்பறிவின் மூலமே பகுத்தறிந்து விழிப்புணர்வு பெறமுடியும் என்பதைத் தன் இலட்சியமாகக் கொண்டு, குடியரசு வார இதழைத் தொடங்கினார்.
பெரியார் பிறந்தநாள்
சமுதாயத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்திட சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் சுயமரியாதை உணர்வு தேவை என்பதை அனைவருக்கும் உணர்த்தினார். தந்தை பெரியார் அவர்கள் 95 ஆண்டு காலம் வாழ்ந்து தமிழினத்தின் எழுச்சிக்காகப் பாடுபட்டு, சுய மரியாதை, பகுத்தறிவு, சமூக நீதி ஆகிய அடிப்படைக் கொள்கைகளால், இன்றும் மக்களின் மனங்களில் வாழ்ந்து வருகிறார். 18ஆம் வயதில் தொடங்கிய அவரது பொது வாழ்க்கையானது, இறுதி மூச்சுவரை தொடர்ந்தது.
பெரியார் 147
தமிழ்நாடு அரசின் சார்பில், கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம். வைக்கத்தில் தந்தை பெரியாருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அவர் வாழ்ந்த வீடும் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா இல்லமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் நாள் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சமூக நீதி நாள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அன்னாரின் பிறந்த நாள் "சமூக நீதி நாள்" ஆகக் கடைப்பிடிக்கப்படும், என 2021 இல் அறிவித்தார்கள். அதன்படி, செப்டம்பர் 17 ஆம் நாள் ஆண்டுதோறும் "சமூக நீதி நாள்" எனக் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்நாளில், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்படுகிறது.
ஸ்டாலின் வாழ்த்து
இந்நிலையில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்," தந்தை பெரியார் - இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு! தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி! தந்தை பெரியார் என்றும் - எங்கும் நிலைத்திருப்பார்!" என பதிவிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில்," கேள்விகள் கேட்டு பகுத்தறிவை விதைத்தார்! உணர்வுகளைத் தட்டி உழுப்பி உரிமைக்காக போராடினார்! சமத்துவ சமுதாயம் காண வயது கூடினும் தளராமல் உழைத்தார்! யாருக்கும் யாரும் சிறியார் அல்ல என்றார்! அதனாலே அவர் நம் #பெரியார் என்றானார்! பகுத்தறிவுப் பகலவனின் பிறந்தநாளில், அவர் வகுத்த சமூகநீதிப் பாதையில் என்றும் பயணித்து, உண்மையான சமத்துவ ஆட்சியை அதிமுக தலைமையில் 2026-ல் அமைத்திட உறுதியேற்போம்! வாழ்க பெரியாரின் புகழ்!" என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications