துக்கத்தை மறந்து.. முதல்வர் ஸ்டாலினுக்கு தனியாக நன்றி சொன்ன ஓபிஎஸ்.. சமூகநீதி நாள் குறித்து உருக்கம்
சென்னை: பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்ததற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ, பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.
பெரியாரின் பிறந்த நாளை இனி சமூக நீதி நாளாக தமிழ்நாடு அரசு கொண்டாடும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் இன்று தெரிவித்தார். இது தொடர்பாக இன்று அவையில் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின். சமூக நீதியின் அடித்தளமாக விளங்கியவர் பெரியார். இந்தியா முழுமைக்கு சமூக நீதி பாடம் எடுத்து, சுயமரியாதை கருத்துக்கள் நாடு முழுக்க பரவ முக்கிய காரணமாக இருந்தவர் பெரியார். பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும். சமூக நீதி நாளன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் உறுதிமொழி எடுப்பார்கள், என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதிமுகவின் வழக்கம்
ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திரப் போராட்ட வீரர்களையும், சமுதாயத்தில் மறுமலர்ச்சியை உருவாக்கப் பாடுபட்டவர்களையும், தன்னலமற்ற மக்கள் சேவை புரிந்தவர்களையும், மக்களின் உரிமைகளை மீட்க போராட்டங்களை நடத்தியவர்களையும், சமூக நீதிக்காக குரல் கொடுத்தவர்களையும் கௌரவிக்கும் வகையில், அவர்களுக்கு திருவுருவச் சிலைகள் அமைப்பதையும், நினைவு மண்டபம் கட்டுவதையும், அரசுக் கட்டடங்களுக்கு அவர்களின் பெயர்களை வைப்பதையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது ஆட்சிக் காலத்தில் வழக்கமாக கொண்டிருந்தது.

தந்தை பெரியார்
இந்திய விடுதலைக்கு முன், மொழிப்பற்றினையும், நாட்டுப் பற்றினையும், ஒருமைப்பாட்டினையும், காவேரி போல் பெருக்கெடுத்து ஓடும் தன் பாட்டுத் திறத்தால், கவிதை நயத்தால் உணர்த்தி, உறங்கிக் கிடக்கும் மக்களைத் தட்டி எழுப்பி, விடுதலை உணர்வினை ஊட்டியவர் மகாகவி பாரதியார் என்றால், விடுதலைக்குப் பின் பகுத்தறிவு, சுயமரியாதை, தன்மானம், சமூகநீதி ஆகியவற்றை மக்களிடையே பரப்பி தமிழ்நாட்டில் சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார் அவர்கள்.

பெருமைப்படுத்தும் பணிகள்
தந்தை பெரியார் அவர்கள் வகுத்துத் தந்த பாதையில் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களை பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்ற பெருமை பேரறிஞர் அண்ணா , புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., கலைஞர் மு. கருணாநிதி, புரட்சித் தலைவி அம்மா ஆகியோரையே சாரும். சமூக நீதி உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகம், சமூக மாற்றத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், சமூக நீதிக்காக பாடுபட்டவர்களை பெருமைப்படுத்தும் பணியையும் செய்து வருகிறது.

திராவிடர் கழகம்
அந்த வகையில், தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டினை பாதுகாத்ததற்காக, 'சமூகநீதி காத்த வீராங்கனை' என்ற பட்டத்தை மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு திராவிடர் கழகம் வழங்கி கௌரவித்தது என்பதைத் இந்தத் தருணத்தில் நினைவுகூர விரும்புகிறேன்.

சாக்ரடீஸ்
"அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று நம்பி அறிவிழந்து போகாமல் எவன் சொன்ன சொல்லானாலும் பகுத்தறிந்து உள் அறிவால் உணர்" என்று சிந்தனையாளர் சாக்ரடீஸ் கூறியதை வற்புறுத்தி, மக்களிடையே எடுத்துச் சென்று தமிழ்நாட்டில் ஒரு சமூகப் புரட்சியை ஏற்படுத்திய தந்தை பெரியார் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில், அவர் பிறந்த தினமான செப்டம்பர் 17 ஆம் நாள் "சமூக நீதி" நாளாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது.

நன்றி
இந்த அறிவிப்பிற்கு காரணமான மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதோடு, இதனை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன்., என்று ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி கடந்த வாரம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். முதல்வர் ஸ்டாலின் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில்தான் தூக்கத்திற்கு இடையிலும், சமூக நீதி நாள் குறித்த அறிவிப்பிற்காக ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் தனியாக நன்றி தெரிவித்துள்ளார். நேற்று பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினரும் இந்த அறிவிப்பை வரவேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications