"ஒளியாதே ஒளியாதே கேரவனுக்குள் ஒளியாதே!" விஜய்யின் பனையூர் வீட்டை பெரியார் அமைப்பினர் முற்றுகை
சென்னை: கரூர் கூட்டநெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தவெக தலைவர் விஜய்யின் வீட்டை பெரியார் அமைப்புகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று நாமக்கல்லில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு வந்திருந்த விஜய், தனது பிரச்சார பேருந்து மீது ஏறி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸுக்கு வழிவிட முயன்ற போது கூட்டநெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து இந்த நெரிசலில் சிக்கிய 39 பேர் பலியாகிவிட்டனர். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் மேலும் ஒருவர் பலியாகிவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அது போல் சிகிச்சை பெறுவோரில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இத்தனை பெரிய விபத்து நடந்தும் அது குறித்து கவலையே படாமல் கரூரில் இருந்து சென்னைக்கு விஜய் தப்பியோடி வந்தது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதயம் நொறுங்கியது என்று சம்பவம் நடந்து 3 மணி நேரம் கழித்தே அவர் ட்வீட் போட்டுள்ளார்.
விஜய்யின் நீலாங்கரை வீட்டை சுற்றி போலீஸ் பாதுகாப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் விஜய்யின் பனையூர் வீட்டை பெரியார் இயக்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அவர்கள், "வெளியே வா வெளியே வா முதலாளியே வெளியே வா, பதில் சொல் பதில் சொல் குழந்தைகள் உயிருக்கு பதில் சொல், ஒளியாதே ஒளியாதே வீட்டுக்குள்ளே ஒளியாதே, வெளியே வெளியே வா பதில் சொல் பதில் சொல், குழந்தைகள் உயிர்களென்ன அலட்சியமா அலட்சியமா, ஒளியாதே ஒளியாதே கேரவனுக்குள் ஒளியாதே, சாமானியன் உயிரென்ன அலட்சியமா, பதில் சொல் பதில் சொல்" என கோஷங்களை எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications