வட இந்தியாவை விட தமிழ்நாடு பெரும் வளர்ச்சி அடைய காரணமே பெரியார்தான்: பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன்
சென்னை: வட இந்தியாவை விட தமிழ்நாடு மிகப் பெரும் வளர்ச்சி அடைய காரணமே தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள்தான் என பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் விவரித்துள்ளார்.
இது தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு ஜெயரஞ்சன் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
நம்முடைய தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக மாற்றங்கள் ஆகிய இரண்டும் ஒன்றோடொன்று பின்னி பிணைந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. கடந்த 60 ஆண்டுகளாக இதை நாம் பார்க்கலாம். திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்து 50 ஆண்டுகளாகின்றன. இந்த 50 ஆண்டுகளில் திராவிடக் கட்சிகள் செய்தவை வெளி உலகத்துக்கு மாயாஜாலம் போல தெரியலாம். ஆனால் பிரமிக்கத்தக்க ஒரு மாற்றத்தை திராவிட கட்சிகள் செய்திருக்கின்றன.

பெரியாரின் பாதைதான்
பொருளாதார ரீதியாக பார்த்தால் வட இந்திய மாநிலங்களைப் போல நாமும் பின் தங்கி இருந்த காலமும் உண்டு. அதை தாண்டி 50 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய பிரமாண்டமான வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்ததில் திராவிடக் கட்சிகளின் பங்கு மிக மிக முக்கியமானது. இதற்கு அடிப்படையாக இருப்பது தந்தை பெரியார் வகுத்து கொடுத்த பாதைதான்.

வளர்ச்சி பரவலாக்கல்
முதலில் வளர்ச்சி என்பதை ஜனநாயகப்படுத்துவது என்பது இங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. பிற மாநிலங்களில் ஒரு சில குறிப்பிட்ட நிறுவனங்களதான் தொழில்துறையில் வளர்ச்சி அடையும். அதன் மூலமே மக்களுக்கு வளர்ச்சி சென்றடைவதாக காட்டப்படும். ஆனால் தமிழ்நாட்டில் இந்த வளர்ச்சி பரவலாக்கப்பட்டிருக்கிறது, அதுசரி என்ன வகையில் பரவலாக்கப்பட்டிருக்கிறது? என்பதை பார்க்க வேண்டும்.

கல்வியை ஜனநாயகப்படுத்துதல்
கல்வியை எடுத்துக் கொண்டால் தொடக்கக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை இலவசமாக கொடுப்பது, இதில் இடஒதுக்கீடு அளிப்பது என கல்வி அனைவருக்குமாக ஜனநாயகப்படுத்தப்பட்டிருக்கிறது. அடுத்ததாக பல இடங்களில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு அதன் மூலம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதன் மூலமாக அது 30 ஆண்டுகளில் மிகப் பெரிய பலனைத் தந்தது.

அறிவும் உலகமயமாக்கலும்
அதாவது இடஒதுக்கீடு மூலம் அதிக அளவில் படித்து ஆங்கில அறிவைப் பெற்று தயாராக நாம் இருந்தோம். அந்த நிலையில்தான் உலகமயமாக்கல் என்பது அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது கிடைத்த புதிய வாய்ப்புகளை நாம் முழுமையாக பயன்படுத்த இந்த இடஒதுக்கீடு மூலம் பெற்ற கல்வி மிகவும் ஏதுவாக இருந்தது. இந்த ஜனநாயகப்படுத்தப்பட்ட கல்வி முறையால்தான் இது சாத்தியமானது.

பெரியார்தான் காரணம்
அதனால்தான் தமிழகம் கடந்த 20 ஆண்டுகளில் மிகப் பெரும் வளர்ச்சியை பெற்றிருக்கிறது. இதற்கு அடிப்படையே இதற்காக போராடிய தந்தை பெரியார் ஒரு மிக முக்கிய காரணம், தந்தை பெரியாரை கடவுள், மதம் மறுப்பாளராக மட்டும் பார்ப்பது மிகவும் குறுகிய புரிதலாகும் என்பது என் கருத்து.

எதிரான குரல்
மானுட விடுதலைக்குத் தடையாக இருக்கிற மொழி, இனம், ஜாதி உள்ளிட்ட அனைத்து ஆதிக்கங்களுக்கும் எதிராக குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். அந்த குரல்தான் மனிதகுல விடுதலைக்கான மிகப் பெரிய பாதை என நம்புகிறேன். ஆகையால்; தமிழருக்கு, தமிழுக்கு அல்லது சூத்திரர்களுக்கு, தாழ்த்தப்பட்டோருக்கு மட்டுமே தந்தை பெரியார் தொண்டாற்றினார் எனவும் நாம் புரிந்து கொள்ளவும் கூடாது. இவ்வாறு ஜெயரஞ்சன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications