பெருங்களத்தூர் டூ ஜிஎஸ்டி ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்.. காலையிலேயே நெரிசலில் சிக்கிய சென்னை
சென்னை: 4 நாள் லீவு முடிந்து சொந்த ஊர் சென்றவர்கள், ஊர் திரும்பியதால், சென்னையின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக, பொதுமக்கள், பண்டிகை காலங்களில் தங்களின் சொந்த ஊருக்கு கிளம்பி செல்வது வழக்கம். அப்படித்தான் இந்த முறையும் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது.

சென்னைவாசிகள்: இதன்காரணமாக, பஸ்களில் பயணிகள் சிரமப்படக்கூடாது என்பதற்காக, கூடுதல் பேருந்துகளை தமிழக அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. அந்தவகையில், சென்னைவாசிகளும் அவரவர் சொந்த ஊர்களுக்கு கிளம்பி சென்றார்கள்.
இந்த 4 நாள் விடுமுறைகள் முடிந்த நிலையில், இன்று புதன்கிழமை அலுவலகம், பள்ளி, கல்லூரிக்கு செல்ல வேண்டியிருப்பதால், ஏராளமானோர் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். இதனால், சென்னையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது... நேற்று மாலையில் இருந்தே முக்கிய சாலைகளில் வாகனங்கள் வரிசை கட்ட துவங்கிவிட்டன.
மதுராந்தகம்: குறிப்பாக, மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது... சிங்கபெருமாள் கோயில் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 4 கிலோமீட்டர் தொலைவிற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.. கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மறைமலைநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் மெல்ல மெல்ல ஊர்ந்தபடி செல்கின்றன.
அதேபோல, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு மற்றும் ஓங்கூர் சுங்கச்சாவடி பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ஜிஎஸ்டி சாலை : அரசு பஸ்களில் மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான ஆம்னி பஸ்களும் சென்னையை நோக்கி வருகின்றன.. இதைத்தவிர, கார்களிலும், வேன்களிலும், பொதுமக்கள் சென்னையை நோக்க படையெடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள்.. இதனால், நேற்று நள்ளிரவிலேயே ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.. விடிகாலையில் சென்னை வந்து சேரக்கூடிய பஸ்கள் எல்லாம், காலை 7 மணி, 8 மணி வரை சாலைகளில் காத்து கிடக்கும் சூழல் ஏற்பட்டது.

தற்போதும்கூட, பெருங்களத்தூர் பகுதியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் பகுதியில் ஆமை போல வாகனங்கள் ஊர்ந்து வருகிறது.. பிரதான சாலைகளில், நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கும் சூழல் உள்ளதால், வாகன ஓட்டிகள் காலையிலேயே கடும் அவஸ்தைக்கு ஆளாகி உள்ளனர். இதனால், நேரத்துக்கு அலுவலகம், பள்ளி, கல்லூரி செல்ல முடியாமல் பயணிகள் தவித்துவிட்டனர்.
பெருங்களத்தூர்: எனினும் போக்குவரத்து போலீசார் சாலைகளில் நெரிசல் ஏற்படாதவாறு நடவடிக்கைகளில் ஏற்பட்டு வருகிறார்கள். இதனிடையே, தாம்பரம் போன்ற பகுதிகளில் நகரும்பட்டிகளில், வயதானவர்கள் உட்பட பயணிகள் பலரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். அதேபோல, பல்வேறு சுங்கச்சாவடிகளிலும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications