"அவர்" இருந்தால்.. டெபாசிட்டே கிடைக்காது.. பாஜக பயந்தே விட்டது".. போட்டு தாக்கிய பீட்டர் அல்போன்ஸ்
கிரண்பேடியை சரமாரியாக விமர்சித்தார் பீட்டர் அல்போன்ஸ்
சென்னை: கிரண் பேடியை இனியும் விட்டு வைத்திருந்தால் புதுச்சேரியில் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்காது என்று பாஜகவினரே சொன்னதால்தான் அவரை மாற்றியுள்ளது மத்திய பாஜக என்று பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக வந்தது முதலே அதிரடியாக செயல்பட்டவர் கிரண் பேடிதான். குடுகுடுவென ஓடிக் கொண்டே இருந்தார். நாராயணசாமியை நிம்மதியாக ஒரு நாள் கூட தூங்க விட்டதில்லை. அப்படி ஒரு அதகளம் செய்து வந்தார்.
இந்த நிலையில்தான் திடீரென அவரை மாற்றி விட்டனர். அவருக்குப் பதில் தமிழிசையை கொண்டு வந்துள்ளனர். கிரண் பேடி நீக்கமும், தமிழிசை வரவும் ஒரு விஷயத்தை தெளிவாக்கியுள்ளது. அதாவது புதுச்சேரியில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளதையே இது வெளிப்படுத்துவதாக சொல்கிறார்கள்.

பீட்டர் அல்போன்ஸ்
காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸும் கூட இதையே சொல்கிறார். தனியார் தொலைக்காட்சி டிபேட்டில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், ஊழல் புகாருக்குள்ளான ஆபீசர்கள் ஓய்வு பெறுவதற்கு முதல் நாள்தான் அவர்களை சஸ்பெண்ட் செய்வார்கள். அதுபோலத்தான் கடைசி நாள் வரை காத்திருந்து நடவடிக்கை எடுப்பது போல கிரண் பேடி மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். அவருக்கு 3 நாள் அவகாசம் கூட கொடுக்காமல் அவமானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

டெபாசிட்
நான் புதுச்சேரியில்தான் இருக்கிறேன். இங்குள்ள எனது நண்பர்களிடம் கேட்டபோது, இவரை சீக்கிரமாக இங்கிருந்து அனுப்பி வைக்காவிட்டால் நமக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்று பாஜகவினரே கட்சி மேலிடத்திடம் சொன்னதால்தான் கிரண் பேடியை மாற்றி விட்டதாக பாஜகவினரே சொல்கிறார்கள். இவரை அனுப்பினால்தான் ஏதாவது மரியாதை மிஞ்சும் என்று பாஜகவினரே சொல்லப் போய்த்தான் கிரண் பேடியை மாற்றியுள்ளனர்.

தகுதி
கிரண் பேடியை நீக்கம் தான் செய்துள்ளனர். அவரை மாற்றவில்லை. மாற்றம் என்றால் வேறு மாநிலத்துக்கு அவரை மாற்றியிருக்கலாமே.. பதவி வகிக்கத் தகுதியில்லாதவர் அவர் என்றுதான் இதற்குப் பொருள். அந்த அடையாளத்தோடுதான் அவர் வெளியேறியுள்ளார். காங்கிரஸ் இல்லாத பாரதம், கழகம் இல்லாத தமிழகம், கம்யூனிஸ்ட் இல்லாத இந்தியா என்று பாஜக சொல்லிக் கொண்டிருக்கிறது.

ஆளுநர்
இது என்ன ஒரு கட்சி ஜனநாயகமா.. பாஜக இல்லாத பாரதம் என்று காங்கிரஸார் ஒரு போதும் கூறியதில்லை. நாங்கள் கூற மாட்டோம். காரணம் அப்படிச் சொல்வது ஜனநாயக விரோதம். புதுச்சேரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் முடக்கியிருக்கிறது பாஜக. அரசியல் சாசன சட்டப்படி ஆளுநர் பதவி என்பதை கிரண் பேடி பயன்படுத்தவில்லை. விபத்து நேரிடும்போது தடுக்கத்தான் ஆளுநர் பதவி. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசை முடக்க ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது.

சட்டசபை
முதல்வருக்கான அதிகாரம், ஆளுநருக்கான அதிகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. கட்சி தாவல்தடை சட்டத்தை கொண்டு வந்ததே காங்கிரஸ்தான். ஆனால் அதை முறியடிக்க பாஜக பல புத்திசாலித்தனமான செயல்ககளில் ஈடுபடுகிறது. அதாவது சட்டசபை உறுப்பினர்களை கைப்பற்றுவது, அவர்களை ராஜினாமா செய்ய வைப்பது, இடைத்தேர்தலில் போட்டியிட வைத்து அவர்களை அமைச்சராக்குவது. இப்படித்தான் கட்சிகளை காலி செய்து வருகிறது பாஜக.

கபளீகரம்
இன்று கர்நாடகம், மத்தியப் பிரதேசம், கோவா, அஸ்ஸாமில் உள்ள அமைச்சர்கள் எல்லாம் யார்.. பேட்டி கொடுக்கிற பாஜக தலைவர்கள் எல்லாம் யார்.. எல்லோருமே முன்னாள் காங்கிரஸ்காரர்கள்தான். நூதனமாக கட்சிகளை கபளீகரம் செய்து வருகிறது பாஜக. இப்போது புதுச்சேரியில் நாராயணசாமிதான் வென்றுள்ளார். 5 ஆண்டுகள் வெற்றிகரமாக ஆட்சியை நடத்தியுள்ளார். அடுத்து சட்டசபை தேர்தல் அறிவிக்கை வரப் போகிறது. இந்த நேரத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு என்பதெல்லாம் சாத்தியமே இல்லை. கிரண் பேடி அவமானப்பட்டுள்ளார்" என்று கூறினார் பீட்டர் அல்போன்ஸ்.












Click it and Unblock the Notifications