தமிழ்நாட்டில் வெடிகுண்டு வைப்போம் என மிரட்டிய பாஜக ஆதரவு மாஜி ராணுவ வீரரை கைது செய்ய வலுக்கும் குரல்
வெடிகுண்டு வைப்போம் என பேசிய மாஜி ராணுவ வீரரை கைது செய்ய வேண்டும் என பீட்டர் அல்போன்ஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் வெடிகுண்டு வைப்போம்; ஆமாம் வைப்போம்.. இது மிரட்டல் அல்ல- எச்சரிக்கை என பொதுவெளியில் பகிரங்கமாக பயங்கரவாதத்தை தூண்டிப் பேசிய பாஜக ஆதரவு முன்னாள் ராணுவ வீரரை கைது செய்ய வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வலியுறுத்தி உள்ளார்.
கிருஷ்ணகிரியில் தகராறு ஒன்றில் ராணுவ வீரர் பாபு கொல்லப்பட்டார். இது மிகப் பெரும் சர்ச்சையானது. ராணுவ வீரர் படுகொலையைக் கண்டித்து சென்னையில் தமிழ்நாடு பாஜக சார்பில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் கர்னல் பாண்டியன் பேசுகையில் , இந்திய ராணுவம் உலகத்திலேயே 2 வது பெரிய ராணுவம். உலகத்திலேயே ஒழுக்கமான ராணுவம். நீங்கள் ராணுவ வீரர்களை எங்கு வேண்டுமானாலும் பார்க்கலாம். ஒழுக்கத்துக்கு பெயர்போனது ராணுவம். அப்படிப்பட்ட ராணுவ வீரர்களை சீண்டினால் அது தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாடு அரசுக்கும் நல்லது அல்ல. எங்களுக்கு பரீட்சை வைத்து பார்க்க நினைத்தால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இருக்காது. அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களும் குண்டு வைப்பதில் கெட்டிக்காரர்கள். சுடுவதில் கெட்டிக்காரர்கள். இதை எல்லாம் எங்களை செய்ய வைத்துவிடாதீர்கள் என்றார்.
அத்துடன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆமாம் நாங்கள் குண்டு வைப்போம். துப்பாக்கியை எடுப்போம். இது மிரட்டல் அல்ல. எச்சரிக்கை எனவும் அந்த முன்னாள் ராணுவ வீரர் கர்னல் பாண்டியன் ஆவேசமாக கூறினார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையாகி உள்ளது. முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தமிழ்நாட்டு அரசுக்கு பகிரங்கமாக சவால் விடுத்து குண்டு வைப்போம் என பேசியிருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளதாவது: தமிழகத்தை வன்முறைக் களமாக்க, சமூக அமைதியைக் கெடுக்க,தொழில் முதலீடுகளைத் தடுக்க நண்பர் அண்ணாமலை செய்யும் மக்கள் விரோத அரசியலின் ஒரு கருவிதான் இந்த முன்னாள்ராணுவ நபர். முள்மரத்தை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். தேசப்பதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை தேவை

பூவுலகின் நண்பர் அமைப்பின் நிர்வாகி ஜி.சுந்தரராஜன்: "ஆமாம் குண்டு வைப்போம், துப்பாக்கியை பயன்படுத்துவோம்,இது மிரட்டல் இல்லை,எச்சரிக்கை" என்கிறார் இந்த ஓய்வுபெற்ற இராணுவக் "கோழை". இவர் இரணுவத்தில் இருந்தாரா இல்லை அடியாளாக இருந்தாரா? இதே வார்த்தைகளை ஒரு இஸ்லாமியர் சொல்லியிருந்தால் என்னவாகியருக்கும்?












Click it and Unblock the Notifications