ஏ.சி, ஃபிரிட்ஜ் , சர்வீஸ் சென்டர்களை மட்டுமாவது திறக்க முடியுமான்னு பாருங்க.. தமிழக அரசுக்கு கேள்வி
சென்னை: ஏ.சி, ஃபிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகளையும், சர்வீஸ் செண்டர்களையும் திறக்க உத்தரவிடக் கோரி வழக்கு தமிழக அரசு பதிலளிக்கசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
மருத்துவமனைகளுக்கும், சாதாரண குடிமகனுக்கும் அத்தியாவசிய தேவையான ஏ.சி, ஃபிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனையகங்களையும், ரிப்பேர் செய்யும் கடைகளையும் திறக்க கோரி வழக்கறிஞர் ஜி. ராஜேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஊரடங்கு காரணமாக பால், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கி பாதுகாக்க ஃபிரிட்ஜ் அத்தியாவசியமாகிறது எனவும், பொதுமக்களின் அன்றாட தேவையான இந்த வீட்டு உபயோக பொருட்கள் பழுதடைந்தால், அதை சரி செய்ய முடியாத நிலை உள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.சத்யநாராயணன் மற்றும் திரு எம்.நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அரசுக்கு பழுது பார்க்கும் சர்வீஸ் சென்டர்களை மட்டுமாவது திறக்க முடியுமா என்று பாருங்கள் என்று தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்கும்படி உத்தரவிட்டனர்