புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல் விலை.. டீசல் விலையும் உயர்வு.. இன்று 76 காசுகள் அதிகரிப்பு..!
சென்னையில் இன்று 10வது நாளாக உயர்ந்துள்ளது பெட்ரோல் டீசல் விலை உயர்வு.
சென்னை: பெட்ரோல் விலை 10வது நாளாக உயர்ந்துள்ளது.. இன்று, பெட்ரோல் லிட்டருக்கு 76 காசு உயர்ந்து, 107.45 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதுவே, பெட்ரோல் விற்பனையில் உச்ச விலையாகும். டீசல் லிட்டருக்கு 76 காசு உயர்ந்து, 97.52 ரூபாய்க்கு விற்கப்பட்டது..!
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
இதற்கிடையில் ரஷிய-உக்ரைன் போர் சூழல் தாக்கம் காரணமாக, பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும் என்றெல்லாம் பேசப்பட்டது.

விமர்சனம்
கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கிய நேரத்தில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விலை அதிகரிக்கும் என்ற தகவலும் வெளியானது. ஆனாலும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்படாமல் இருந்தது... குறிப்பாக, தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்ற வந்த நிலையில் கடந்த பல நாட்களாக நாட்டில் பெட்ரோல் டீசல் விலை எந்தவிதமான மாற்றங்களும் இல்லாமல் தொடர்ந்து ஒரே விலையில் நீடித்து வருகிறது.. தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை என்று எதிர்க்கட்சிகளும் இதை விமர்சித்திருந்தன.

பெட்ரோல் டீசல்
இந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 5 முதல் 137 நாட்களாக தொடர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.81, டீசல் ரூ.91.88 என ஒரே விலையில் நீடித்த நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 8 நாட்களுக்கு முன் உயரத் துவங்கியது... அதாவது கடந்த மார்ச் 22ம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்தது. 137 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை அன்றுதான் உயர்ந்தது. அதன்பிறகு தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது...

டீசல் விலை
கடந்த 9 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3.78, டீசல் விலை ரூ.3.90 அதிகரித்து இருப்பது மக்களை அதிர்ச்சி அடைய வைத்து வருகிறது.. சென்னையில், நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.94, டீசல் ரூ.96.00க்கு விற்பனையானது. சென்னையில் நேற்று லிட்டர் பெட்ரோல் 106.69 ரூபாய்; டீசல் 96.76 ரூபாய்க்கும் விற்பனையாகின. இந்நிலையில் இன்று, பெட்ரோல் லிட்டருக்கு 76 காசு உயர்ந்து, 107.45 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதுவே, பெட்ரோல் விற்பனையில் உச்ச விலையாகும். டீசல் லிட்டருக்கு 76 காசு உயர்ந்து, 97.52 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 10வது நாளான இன்றும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது வாகன ஓட்டிகளை கவலையில் ஆழ்த்தி வருகிறது.

போராட்டம்
இதனிடையே, எரிபொருள் விலை ஏற்றம் எதிர்க்கட்சிகளை கொதிப்பில் ஆழ்த்தி உள்ளது.. குறிப்பாக, இந்த விலையேற்றத்தை கண்டித்த காங்கிரஸ் கட்சி இன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது... இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விலைவாசி இல்லாத பாரதம் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 2-ம் தேதி மாவட்ட தலைநகரங்களிலும், ஏப்ரல் 7-ம் தேதி மாநில தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

ராமதாஸ்
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து, தருமபுரியில் தேமுதிக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது... அதேபோல, பெட்ரோல் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் அவற்றின் இரு சக்கர வாகனங்களின் எரிபொருளுக்காக மட்டும் மாதம் ரூ.5 ஆயிரத்திற்கும் கூடுதலாக செலவிட வேண்டி இருக்கிறது என்பதாலும், இனியும் அதிகரிக்கும் என்ற அச்சம் இருப்பதாலும், உற்பத்தி வரிக் குறைப்பின் மூலம் பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்றைய தினம் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications