பெட்ரோல், டீசல் விலையை நாங்க ஏன் குறைக்கனும்? அண்ணாமலை கள நிலவரம் தெரியுமா... மா.சுப்ரமணியன் சுளீர்
பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துவது அவர்கள், குறைப்பது நாங்களா? என்று மா.சுப்ரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துவது அவர்கள், குறைப்பது நாங்களா? என பல மாநிலங்கள் கேள்வி எழுப்புகின்றன. கள நிலவரம் என்ன என்பதை அண்ணாமலை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. ஒருலிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதனையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைந்துள்ளது.
உண்மையான வில்லேஜ் விஞ்ஞானி நீங்க தான் பாஸ்! பிளாஸ்டிக் பையில் இருந்து பெட்ரோல்! அசத்திய கார்த்திக்.!
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
கடந்த சில மாதங்களாகவே ஏறுமுகத்தில் இருந்த பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது எனினும் இன்னும் 10 ரூபாய் வரை குறைக்கலாம் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. அதேநேரத்தில் மாநில அரசுகள் தங்களது வரியை குறைக்க வேண்டும் எனவும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
கடும் எதிர்ப்பு
மத்திய அரசின் கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எந்த மாநிலத்தின் கருத்தையும் கேட்காமல் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு கடுமையாக உயர்த்திவிட்டு, தற்போது, மாநிலங்களை குறைக்கச் சொல்லி வலியுறுத்துவதுதான் கூட்டாட்சியா என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். பெட்ரோல் மீதான வரியை 250 சதவீதம், டீசல் மீதான வரியை 900 சதவீதம் உயர்த்திவிட்டு, தற்போது, வெறும் 50 சதவீதம் மட்டும் வரியை மத்திய அரசு குறைத்துள்ளதாகவும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்ணாமலை அறிவிப்பு
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை 72 மணி நேரத்திற்குள் குறைக்க வேண்டும். இல்லையெனில் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் மா.சுப்ரமணியன்.
மா.சுப்ரமணியன் பதிலடி
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் அண்ணாமலையின் கருத்து பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது அவர்கள், குறைப்பது நாங்களா?' என, அனைத்து மாநிலங்களும் விமர்சனம் செய்து வருகிறது. இதையும் அண்ணாமலை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.