பெட்ரோல், டீசல் விலை ரூ.3 உயர்வு வெறும் டிரைலர் தான்.. மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது!
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று உயர்ந்ததை தாண்டி, மீண்டும் பெரிய அளவில் உயர வாய்ப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஆண்டைப் போன்ற லாப நிலைக்கு திரும்ப வேண்டுமெனில் தற்போதைய எரிபொருள் விலையை விட குறைந்தது 16 சதவீதம் வரை உயர்த்தப்பட வேண்டும் என்று புதிய ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் சந்தை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் நேரடியாக எதிரொலித்து வந்த நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு
மே 15ஆம் தேதி மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்வு செய்யப்பட்டிருந்தது. பிப்ரவரி மாதம் மத்திய கிழக்கு போர் தொடங்கிய பிறகு இந்தியாவில் அறிவிக்கப்பட்ட முதல் எரிபொருள் விலை உயர்வு இது.
இந்த உயர்வுக்குப் பிறகு டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.97.77 ஆகவும், டீசல் விலை ரூ.90.67 ஆகவும் உயர்ந்தது. சென்னையில் பெட்ரோல் விலை 2.83 ரூபாய் உயர்ந்து 103.67 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் டீசல் விலை 2.86 ரூபாய் உயர்ந்து 95.25 ரூபாயாக உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை அதிரடி உயர்வு
2025 ஜூலை மாதத்தில் இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் கூடை விலை ஒரு பேரலுக்கு 70.95 டாலராக இருந்தது. அந்த காலத்தில் பெட்ரோலின் டீலர் விலை லிட்டருக்கு ரூ.52.09 மட்டுமே இருந்தது. அப்போது மத்திய அரசு சுங்கவரி மற்றும் உற்பத்தி வரி மூலம் லிட்டருக்கு ரூ.22.88 வரி வசூலித்தது. அதோடு டீலர் கமிஷன் 4.40 ரூபாய் மற்றும் மாநில அரசின் மதிப்புக்கூட்டல் வரி 15.40 சேர்ந்து மொத்தம் 94.77 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால் தற்போது நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. இந்திய கச்சா எண்ணெய் கூடை விலை தற்போது 113.99 டாலராக உயர்ந்துள்ளது. அதாவது 70.95 டாலரில் இருந்து சுமார் 61 சதவீத உயர்வு ஏற்பட்டுள்ளது.
இதேவேளையில் ரூபாயின் மதிப்பும் டாலருக்கு எதிராக 87.51 இலிருந்து 94.84 ஆக சரிந்துள்ளது. இதனால் ரூபாய் அடிப்படையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு சுமார் 74 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
சிறிய விலை உயர்வும் பெரிய மாற்றம் தரும்
தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையில் மாதந்தோறும் சுமார் ரூ.55,416 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் பெட்ரோலில் லிட்டருக்கு ரூ.14 மற்றும் டீசலில் ரூ.42 வரை இழப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தினால் மாதாந்திர இழப்பு ரூ.50,450 கோடியாக குறையும். அதாவது மாதத்திற்கு சுமார் ரூ.5,000 கோடி வரை சுமை குறையும். மேலும் ரூ.4 உயர்த்தினால் இழப்பு ரூ.43,828 கோடியாக குறையும். லிட்டருக்கு ரூ.7 வரை உயர்த்தப்பட்டாலும் கூட ரூ.38,863 கோடி அளவுக்கு இழப்பு தொடரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இழப்புகளை முழுமையாக குறைக்க வேண்டுமாயின் பெட்ரோல், டீசல் விலையை சுமார் 16 சதவீதம் வரையில் உயர்த்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களில் மாதத்திற்கு சுமார் 3.7 மில்லியன் டன் பெட்ரோலும், 8.5 மில்லியன் டன் டீசலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. விலை உயர்த்தப்படாத நிலையில் அதிக எரிபொருள் விற்கும் போது கூடுதல் இழப்புகளே ஏற்படும்.
பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு
எரிபொருள் விலை உயர்வு என்பது வெறும் வாகன ஓட்டிகளுக்கான பிரச்சனை மட்டும் அல்ல. லாரி போக்குவரத்து செலவு அதிகரிப்பதால் காய்கறி, உணவுப் பொருட்கள், கட்டுமான பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரக்கூடும். குறிப்பாக நடுத்தர மற்றும் குறைந்த வருமான குடும்பங்களின் மாதாந்திர செலவில் இது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேலும், டீசல் விலை உயர்வு விவசாய துறையையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதனால் பணவீக்கம் மீண்டும் அதிகரிக்கும் சூழல் உருவாகலாம் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஒருபுறம் எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலையை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. மறுபுறம் பொதுமக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்ற நெருக்கடியும் உள்ளது. இதனால் மத்திய அரசு அடுத்த சில மாதங்களில் எரிபொருள் விலை, வரி அமைப்பு மற்றும் மானிய கொள்கை குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.













Click it and Unblock the Notifications