"பக்"குன்னு இருக்கு.. பெட்ரோல், டீசல் விலை டெய்லி கிடுகிடு உயர்வு.. மக்கள் அதிர்ச்சி!
சென்னை: பெட்ரோல், டீசல் விலை கடந்த 5 நாளாக தினசரி உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கிட்டத்தட்ட ஒரு லிட்டருக்கு ரூ 3 வரை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கலங்கிப் போயுள்ளனர்.
தொடர்ந்து 5வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை உயர ஆரம்பித்த விலை தற்போது தொடர்ந்து வருகிறது. பைசா பைசாவாக உயர்த்திக் கொண்டே போகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இதுவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.83ம், டீசல் லிட்டருக்கு ரூ. 2.74ம் உயர்ந்துள்ளது.

10 நாள் நீடிக்கும்
இந்த விலை உயர்வு இப்போதைக்கு அடங்காது போலத் தெரிகிறது. காரணம் அடுத்த 10 நாட்களுக்கு இது நீடிக்கலாம் என்று எண்ணெய் நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக அளவில் கிராக்கி அதிகரித்திருப்பதாலும், கச்சா எண்ணெய் விலை ஸ்திரமாகி வருவதாலும் விலை உயர்வு தவிர்க்க முடியவில்லையாம்.

லாக்டவுன் தளர்வே காரணம்
உலகின் பல நாடுகளிலும் தற்போது கொரோனாவுக்குப் பிந்தைய சூழல் ஏற்பட்டு வருகிறது. பல நாடுகளில் லாக்டவுன் தளர்த்தப்படுகிறது. இதனால் தேவை அதிகரிக்கிறது. எனவே விலை உயர ஆரம்பித்துள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் கச்சா எண்ணெய் விலை அடியோடு குறைந்த சமயத்திலும் கூட நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவே செய்தனர் என்பது நினைவிருக்கலாம்.

தேவை அதிகரிப்பு
டெல்லியில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 60 பைசா உயர்த்தப்பட்டு பெட்ரோல், டீசல் விலை முறையே லிட்டருக்கு ரூ. 74, 72.22 என்று இருந்தது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது மட்டுமல்லாமல் இன்னும் 10 நாட்களுக்கு இப்படியேதான் இருக்கும் என்றும் வெளியாகியுள்ள தகவல் வாகன ஓட்டிகளை கலங்கடிப்பதாக உள்ளது.

பொருட்களின் விலைவாசி உயரும்
லாக்டவுன் சமயத்தில் பெட்ரோல், டீசல் தேவை அடியோடு குறைந்தது. அப்படியும் கூட விடாமல் விலையை ஏற்றிக் கொண்டிருந்தனர். இப்போது லாக்டவுனில் பல தளர்வுகள் வந்து விட்டதால் தேவை சற்றே அதிகரித்துள்ளது. இப்போதும் விலை உயர்வு அமலில் இருப்பது மக்களை அசதி அடையச் செய்துள்ளது. டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அத்தியாவசியப் பொருள் விலை உயர்வுக்கு வித்திடும் என்று மக்கள் கவலைப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications