அனைத்து கொரோனா தடுப்பூசி மையங்களிலும்.. மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை.. தமிழக அரசு சபாஷ் உத்தரவு
சென்னை: தமிழகத்திலுள்ள அனைத்து கொரோனா தடுப்பூசி மையங்களிலும் மாற்றித் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் 2ஆம் அலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மாநிலத்தில் வரும் மே 24ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமும் இன்றி தடுப்பூசிகளை போட்டுட்டுக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், "அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பெறுவதற்குத் தனியாக ஒரு பிரிவு தோற்றுவிக்கப்பட வேண்டும்.
அனைத்து தடுப்பூசி மையங்களிலும் பொது வரிசை அல்லது மாற்றுத் திறனாளிகளுக்கான தனி வரிசை ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வு தளம் அமைக்கப்பட வேண்டும்.
தேவைக்கேற்ப மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைத்துச் செயல்படுத்தப்பட வேண்டும்" என அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவின் மூலம் மாற்றுத்திறனாளிகள் சிரமின்றி தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
18+ அனைவருக்கும் தடுப்பூசிகளைச் செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ள போதும், தட்டுப்பாட்டுக் காரணமாகத் தமிழ்நாட்டில் தற்போது 45+ கடந்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.