"கண்ணை பறிக்கும் ஒளி.." சென்னை ஏர்போர்ட்டில் சரியாக தரையிறங்கும் போது நடக்கும் சம்பவம்! பரபர
சென்னை: சென்னை மீனம்பாக்கத்தில் விமான நிலையம் அமைந்துள்ள நிலையில், சமீப காலமாக இங்கு விமானம் தரையிறங்கும் போது புதுவித பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார்களாம்.
இந்தியாவிலேயே முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றாகச் சென்னை ஏர்போர்ட் இருக்கிறது. மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்த ஏர்போர்ட்டில் இருந்து தினசரி பல உள்ளூர் மற்றும் சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகிறது.

பெங்களூர், ஹைதராபாத்தைப் போல இல்லாமல் சென்னை விமான நிலையம் நகருக்குள்ளே அமைந்துள்ளது. இதனால் மக்களால் எளிதாக அங்கே சென்று வர முடிகிறது என்ற போதிலும் இதே காரணத்தால் வேறு ஒரு பிரச்சினையும் ஏற்படுகிறது.
சென்னை ஏர்போர்ட்: இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஏர்போர்டில் விமானம் ஒன்று வழக்கம் போல தரையிறங்க ரெடியானது.. அப்போது திடீரென பைலட்டை நோக்கி வந்த லேசர் பீம்மால் அவர் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். அப்போது விமானத்தை ஒரு வழியாகப் பாதுகாப்பாக அவர் இறக்கிவிட்டார் என்ற போதிலும் சென்னை ஏர்போர்ட்டில் இதுபோல லேசர் பீம்களால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது..
கடந்த வாரம் பைலட்டை நோக்கி வந்த அந்த லேசர் பீம் என்பது சென்னையில் நடந்த ஒரு இசைக்கச்சேரியில் பயன்படுத்தப்பட்ட ஒன்று என்பதும் தெரிய வந்துள்ளது. அவர்கள் பயன்படுத்தி லேசர் பீம் விமானதிற்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. தரையிறங்கும் நேரத்தில் திடீரென வந்த லேசர் பீம்கள் விமானிக்கு கவனச்சிதறலை ஏற்படுத்தியிருக்கிறது. இது மோசமான ஆபத்தை ஏற்படுத்தலாம் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
என்ன பிரச்சினை: இது குறித்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரிகள் கூறுகையில், "விமான நிலையத்தின் அருகே வரும் போது இதுபோன்ற லேசர் பீம்கள் வரும் நிகழ்வுகள் அதிகமாக நடப்பதாக பைலட்கள் எங்களுக்குப் புகார் அளிக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் போலீசாருக்கு கடிதம் எழுதியுள்ளோம்" என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர்கள் எழுதிய கடிதத்தில் "சமீப காலமாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இவை விமானிகளின் பார்வைக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. விமானம் தரையிறங்கும் போது இந்த லேசர் பீம்களால் கவனச்சிதறல், குழப்பம் மற்றும் சில நொடிகள் தற்காலிக பார்வையிழப்பும் ஏற்படக் கூடும். இது விமானத்திற்கும் பயணிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
எங்கே ஏற்படுகிறது: பரங்கிமலை அருகில் உள்ள ஓடுபாதை 25இல் தான் இவை அதிகம் நடக்கிறதாம். முன்பு இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்த நிலையில், இப்போது அவை அதிகரித்துள்ளது. ஒரு சில வாரங்களில் 7-8 முறை பைலட்கள் இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர். திருமுடிவாக்கம், கோட்டூர்புரம், அடையாறு, பெசன்ட் நகர், கத்திப்பாரா மேம்பாலம், கிண்டி, சைதாப்பேட்டை, மயிலாப்பூர் மற்றும் ஆழ்வார்பேட்டை போன்ற பகுதிகளில் இருந்து இந்த லேசர் பீம் பிரச்சினைகளை பைலட்கள் எதிர்கொள்கிறார்கள்.
திறந்த வெளியில் நடக்கும் திருமணம், இசை நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் லேசர் பீம்களால் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. விரைவில் இது குறித்து சென்னையில் இருக்கும் அனைத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடனும் பேசி இதற்கான தீர்வை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லேசர் பீம்கள் விமானங்களுக்கு எந்தளவுக்கு ஆபத்தானது குறித்து சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பே எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications