லோக்சபா தேர்தல்.. உருவானது அதிமுக - பாஜக கூட்டணி.. பரபரக்கும் பேச்சுவார்த்தை!
பியூஷ் கோயல் இன்று சென்னை வர உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன
சென்னை: பாஜக கூட்டணி இன்றே முடிவாகிவிடும் போல தெரிகிறது. இன்று அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்து அமைச்சர் தங்கமணியுடன் பேச்சு நடத்தியுள்ளார். மறுபக்கம் என் ஆர் காங்கிரஸுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். இருப்பினும் கூட்டணி அறிவிப்பு இன்று இரவே வருமா என்று தெரியவில்லை.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் தேர்தல் வரப்போகிறது. இதனால் எல்லா கட்சிகளும் ஒரு பக்கம் தீவிரமான பிரச்சாரத்திலும் மற்றொரு பக்கம் கூட்டணி சம்பந்தமான பேச்சுவார்த்தையிலும் இறங்கி உள்ளனர்.
தமிழகத்தில் அதிமுகவை பொறுத்தவரை பாஜகவுடனே கூட்டணி அமைக்கப்படும் என்று சொல்லப்பட்டு வருகிறது. மேலும் தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என துணை முதல்வர் ஓபிஎஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
முரளிதரராவ்
பாஜகவோ யாருடன் கூட்டணி என்பதை இரண்டொரு நாளில் அறிவிப்போம் என்று அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் தெரிவித்திருந்தார். இதையேதான் தமிழக பாஜக தலைவரும் சொல்லி வந்தார்.
தலைவர்கள் முகாம்
அதற்கேற்றவாறு இன்று அமித்ஷா ஈரோட்டுக்கு பிரச்சாரத்திற்கு வந்திருக்கிறார். அதனால் பெரும்பாலான தலைவர்கள் இன்று தமிழகத்தில்தான் முகாமிட்டு உள்ளனர்.
பாஜக பொறுப்பாளர்
இந்த நிலையில் இன்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்தார். பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை அதிகாரப்பூர்வமாக அவர் தொடங்கி வைத்தார்.
பியூஷ் கோயல்
இன்று இரவு சென்னை வந்த பியூஷ் கோயல், பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியினருடன் ஆலோசனை நடத்த இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் அவர் தொழிலதிபர் மகாலிங்கம் வீட்டில் வைத்து பேச்சு நடத்தியுள்ளார்.
8 சீட்டுகள்
அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் கூட்டணி அமைக்கவுள்ளன. இதில் என்.ஆர். காங்கிரஸும் இணைந்துள்ளது. இக் கூட்டணியில் 8 சீட்டுகள் பாஜகவுக்கு ஒதுக்கப்படலாம் எனவும் ஏறக்குறைய முடிவாகி உள்ளதாம். அதேபோல தேமுதிக, பாமகவுக்கு தலா 4 சீட் என்றும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளுடன் முழுமையாக பேசி முடித்த பிறகு தொகுதிப் பங்கீடு விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.