நைசா சொல்லுங்க.. நாங்க பார்த்துக்குறோம்! ஸ்கூல், காலேஜ்ல கூட - மா.சுப்ரமணியன் வேதனை
சென்னை: பள்ளி, கல்லூரிகளுக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்கப்படுவது குறித்து ரகசியமாக தகவல் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில், கண் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான கருத்தரங்கை (IIRIS) அமைச்சர் மா.சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், "உலகம் முழுவதிலும் இருந்து 3,500 கண் மருத்துவர்கள் இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டுள்ளனர்.

வருமுன் காப்போம்
இந்த கருத்தரங்கத்தில் கண் மருத்துவ சிகிச்சையில் பயன்படுத்தப்பட உள்ள புதிய தொழில்நுட்பங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும், சென்னையை சேர்ந்த கண் மருத்துவர் ராஜனுக்கு, சாதனையாளர் விருது வழங்கப்பட்டு இருக்கிறது. வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1,260 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது. நேற்று வரை 461 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் வாயிலாக 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பயன்பெற்றுள்ளனர்.

கொரோனா தடுப்பூசி
விரைவில் கண் மருத்துவ சிகிச்சையும் மருத்துவ முகாம்களில் நடத்தப்படும். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணிவது அவசியம். நாளை தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருப்பவர்கள் மெகா தடுப்பூசி முகாமில் வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கஞ்சா விற்பனை
தமிழகத்தில் 36 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1 கோடி 7 லட்சம் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொள்ளாமல் இருக்கின்றனர். இதுவரை கண்டுகொள்ளப்படாமல் இருந்த கஞ்சா விற்பனையை கடந்த ஓராண்டாக தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. மிக விரைவில் கஞ்சா விற்பனை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவரப்படும்.

தகவல் கொடுங்கள்
கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவதுடன், அவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்களின் விற்பனை பற்றி ரகசியமாக தகவல் தெரிவித்தால் உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.












Click it and Unblock the Notifications