கோயில் நிலத்தை வாங்கவே கூடாது.. திருவல்லிக்கேணியில் ரூ.7 கோடி மதிப்புள்ள காலிமனை அதிரடியாக மீட்பு
சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் திருவல்லிக்கேணியில் கோவிலுக்கு சொந்தமான ரூ.7 கோடி மதிப்புள்ள காலிமனையினை அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக மீட்டனர்.
பொதுவாக தமிழ்நாட்டில் கோவில் நிலத்திலோ அல்லது நீர்நிலையை ஒட்டிய ஆக்கிரமிப்பு நிலங்களை வாங்கி குடியேறவோ கூடாது. சில வருடங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் கோயில் நிலத்தில் பழைய வீடு வருகிறது என்று கூறினார்கள். அதன் விலை குறைவாக இருந்தது. வழக்கமான விலையை விட குறைவாக இருக்கிறதே என்று விசாரித்தபோது, பத்திரப்பதிவு செய்து கொள்ள முடியும். பட்டா கிடைக்காது என்று கூறினார்கள். பட்டா கிடைக்காது என்றால் தயவு செய்து வாங்க வேண்டாம் என்று நண்பர்கள் கூறினார்கள். ஏனெனில் என்றாவது ஒரு நாள் கோவில் நிலம் என்று கூறி அறநிலையத்துறை நிச்சயம் வாங்கிவிடும் என்று கூறினார்கள். அதுபோல் தான் பின்னாளில் அவர்களுக்கு சிக்கல் வந்தது.

அதேபோல் நீர்நிலை ஆக்கிரமிப்பு நிலத்தை பத்திரப்பதிவு செய்தவர்களிடம் நிலம் வாங்கினாலும் இதே நிலைமை தான், மடிப்பாக்கம்,வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்பட பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிகளில் பலர் வீடு கட்டி குடியிருந்து வருகிறார்கள். அவர்களில் பலருக்கு பட்டா இல்லை.. நீர்நிலையில் உள்ள இடம் என்பதால் பட்டா என்பது இன்றுவரை தரப்படவில்லை.. சிலர் பாதைகளையும் , ஓடைகளையும் ஆக்கிரமித்து குடியிருந்து வருகிறார்கள். அவர்கள் நிலத்தை பத்திரப்பதிவு எல்லாம் செய்ய முடிந்தாலும், பட்டா வாங்க முடியாமல் தான் இருக்கிறார்கள். 30 வருடம் குடியிருந்தாலும் வெளியேற்றப்படுவது உறுதி என்பது தான் எதார்த்தம். அவர்களுக்கு மாற்று இடம் தரப்படலாம். ஆனால் அதே இடத்தில் தரப்படுவதற்கு வாய்ப்பு மிக குறைவு என்றே அதிகாரிகள் கூறிவருகிறார்கள்..
சரி விஷயத்திற்கு வருவோம். கோவிலுக்கு சொந்தமான நிலங்களை, காலியிடங்களை பத்திரப்பதிவு செய்து யாரிடமும் வாங்கிவிடாதீர்கள்.. ஏனெனில் எத்தனை வருடம் ஆனாலும் சிக்கல் தான். சென்னை திருவல்லிக்கேணியில் கோவிலுக்கு சொந்தமான நிலம் அதிரடியாக மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், சென்னை, திருவல்லிக்கேணி, ராஜா அனுமந்த தெருவில் உள்ள 5 ஆயிரத்து 305 சதுரஅடி பரப்பளவுள்ள காலிமனை காமகலா காமேசுவரர் கோவிலுக்குச் சொந்தமானது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனை தொடர்ந்து, உதவி கமிஷனர் கி.பாரதிராஜா முன்னிலையில், போலீசார் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் ஆகியோரின் உதவியுடன் காலி மனை மீட்கப்பட்டு, கோவில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட இடத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.7.5 கோடியாகும். இந்த நிகழ்வின்போது மயிலாப்பூர் சரக ஆய்வர் மணி, கோவில் செயல் அலுவலர் கங்காதேவி மற்றும் சிறப்பு பணி செயல் அலுவலர்கள் உடனிருந்தனர்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications