பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியானது.. மாணவிகள் அசத்தல்.. ரிசல்ட்டை எப்படி பார்க்கலாம்?
சென்னை: தமிழகத்தில் 8 லட்சம் பேர் தேர்வு எழுதிய பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் 96.04 விழுக்காடு மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவு தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளனர். இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in இணையதளத்தில் பார்க்கலாம்.
Recommended Video
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை பிளஸ் 1 தேர்வுகள் நடந்தது. 8 லட்சத்து 32 ஆயிரத்து 475 பேர் தேர்வு எழுதினர். இதற்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல் 27ம் தேதி மறு தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர்களுக்கும் இன்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களுடைய பதிவு எண், பிறந்ததேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் மாணவர்கள் பார்க்கலாம்.
எப்படி பார்ப்பது
பள்ளி மாணவர்களின் செல்போன் எண்ணிற்கும், தனித்தேர்வர்களுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். மாணவர்கள்www.tnresults.nic.in, https://dge1.tn.nic.in/ , http://dge2.tn.nic.in/ ஆகிய இணையதள முகவரி வாயிலாகவும் தேர்வு முடிவுகளை அறியலாம்.
மதிப்பெண் அட்டவணை
அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்களது மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் இன்று காலை 9.50 மணி முதல் www.dge.tn.in என்ற இணையதளத்தில் இருந்து தங்கள் பள்ளிகளில் படித்து தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் நகல்
விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் இணையதளம் வாயிலாக மதிப்பெண் பட்டியல் வழங்குவதற்கான தேதி மற்றும் வழிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பெண் எப்படி
முன்னதாக பிளஸ்-1 பொதுத்தேர்வின் இறுதிநாள் தேர்வு கொரோனா லாக்டவுன் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் மற்றும் வருகைப்பதிவு அடிப்படையில் இறுதி நாள் தேர்வுக்கான மதிப்பெண்கள் வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த தேர்வு முடிவு வெளியாகி உள்ளது.
மாணவிகள் அதிகம்
பிளஸ் 1 தேர்வில், 96.04 விழுக்காடு மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவு தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளனர். பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவியர்களில் 97.49 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களில் 94.38 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 3.11 சதவீதம் மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2716 பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விகிதம்
இயற்பியல் பாடத்தில் 96.68 சதவீதம் மாணவர்களும், வேதியியல் பாடத்தில் 99.95 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். உயிரியல் பாடத்தில் 97.64 சதவீதம் மாணவர்களும், கணிதம் பாடத்தில் 98.56 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தாவரவியல் பாடத்தில் 93.78 சதவீதம் மாணவர்களும், விலங்கியல் பாடத்தில் 94.53 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணினி அறிவியல் பாடத்தில் 99.25 சதவீதம் பேரும் வணிகவியல் பாடத்தில் 96.44 சதவீதம் பேரும் கணக்குப் பதிவியியல் பாடத்தில் 98.16 சதவீதம் மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 1 தேர்ச்சியில் கோவை முதலிடத்தையும் , விருதுநகர் இரண்டாவது இடத்தையும், கரூர் 3வது இடத்தையும் பிடித்துள்ளன. கடைசி இடத்தை விழுப்புரம் மாவட்டம் பிடித்துள்ளது.