பிளஸ் 1 பொதுத் தோ்வு: விடைத்தாள் நகலை இன்றுமுதல் பதிவிறக்கம் செய்யலாம்.. முக்கிய அறிவிப்பு
சென்னை: மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் பிளஸ் 1 பொதுத் தோ்வு விடைத்தாள் நகலை செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 16 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் 92.09 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.70 சதவீதமும், மாணவிகள் 95.13 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

97.8 சதவீதம் பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடத்தையும், ஈரோடு 97 சதவீதமும், விருதுநகர் 96.2 சதவீதமும், கோவை 95.8 சதவீதமும், தூத்துக்குடி 95.1 சதவீதமும் பெற்று அடுத்தடுத்த இடங்களைப் பெற்றன. பொதுவாக மதிப்பெண் குறைவாகப் பெற்ற மாணவ, மாணவிகள் அல்லது எதிர்பார்த்த மதிப்பெண்கள் வரவில்லை என்று கருதும் மாணவ, மாணவிகள் மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது வழக்கம்.
அந்த வகையில், மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் பிளஸ் 1 பொதுத் தோ்வு விடைத்தாள் நகலை செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத் தோ்வில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் தங்களது விடைத்தாள் நகலினை செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று தோ்வு எண், பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளாம்.
இதையடுத்து, மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதளத்தில் மறுகூட்டல், மறுமதிப்பீடு என்ற தலைப்பை கிளிக் செய்து வெற்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். தோ்வா்கள் இந்த விண்ணப்பத்தை பூா்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து ஜூன் 11-ஆம் தேதி நண்பகல் 12 முதல், 13-ஆம் தேதி மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும். தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தோ்வா்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களை ஒப்படைத்து அதற்குரிய கட்டணத் தொகையை பணமாக செலுத்த வேண்டும்.
மறுமதிப்பீட்டுக்கு கட்டணமாக ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ. 505 செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ. 305, ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ. 205 கட்டணமாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications