சென்னை வெள்ளத்தின்போது திமுக உதவி செய்யவில்லை.. விளம்பரம் செய்தது.. சரமாரியாக தாக்கிய பிரதமர் மோடி!
சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். பேரிடர் காலத்தில் மக்களுக்கு உதவுவதை விட்டுவிட்டு விளம்பரம் செய்துகொண்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார் பிரதமர் மோடி.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 'மீண்டும் மோடி சர்க்கார்' என்ற முழக்கத்துடன் நடைபெறும் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் உரையாற்றி வருகிறார் பிரதமர் மோடி. அப்போது, தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

மோடி பேச்சு: பிரதமர் மோடி பேசுகையில், "தமிழ்நாட்டின் வளர்ச்சியில் உறுதியாக இருக்கிறேன். உலகின் 3 சிறந்த பொருளாதார நாடுகளில் ஒன்றாக நம் இந்தியா உருவாகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சென்னையின் பங்கு முக்கியமானது. சென்னையில் ரூ1,000 கோடிக்கணக்கான நகர்ப்புற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ, விமான நிலைய திட்டங்களுக்கு மத்திய அரசு உதவுகிறது.
மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு இடையூறாக உள்ளது. தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்காக மத்திய அரசு பணியாற்றுகிறது. ஆனால், சென்னைவாசிகளின் தேவைகளை புறக்கணிக்கிறது திமுக அரசு. சென்னையை புயல் தாக்கிய போது பெரும் துயரம் ஏற்பட்டது. நீங்கள் துன்பத்தில் இருந்தபோது அவர்கள் உங்களுக்கு உதவவில்லை.
திமுக உதவி செய்யவில்லை: இயற்கைப் பேரிடர் ஏற்பட்டபோது அவதிப்படும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்குப் பதிலாக துயரத்தை மேலும் மேலும் அதிகப்படுத்துகிறது. அவர்கள் விளம்பரம் மட்டுமே செய்தார்கள். திமுக அரசு வெள்ள தடுப்பு மேலாண்மையை மேற்கொள்ளவில்லை. திமுக அரசு ஊடகங்களை சரி செய்து வெள்ள நீர் வடிந்துவிட்டதாக பிரசாரம் செய்தது.
மக்களின் துயரம் பற்றி திமுக அரசுக்கு அக்கறையும் கவலையும் இல்லை. தமிழ்நாட்டு மக்களைப் பற்றியும் தமிழ்நாட்டைப் பற்றியும் திமுக அரசுக்கு அக்கறையே இல்லை. மத்தியில் உள்ள பாஜக அரசு உங்கள் வேதனையைப் புரிந்துகொள்கிறது, உங்களுக்காக பணியாற்றுகிறது.
கொரோனா காலத்தில் இலவச ரேசன் பொருட்களை வழங்கினோம். கொரோனா காலத்தில் அனைவருக்கும் தடுப்பூசியை இலவசமாக வழங்கினோம். கொரோனா காலத்தில் தமிழக சிறு குறு தொழில்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் கடன் வசதி செய்தோம். கழிப்பறைகள், எரிவாயு இணைப்புகள், குடிநீர் இணைப்புகள் அனைத்து பணிகள் நடக்கின்றன.
திமுகவுக்கு இதுதான் கவலை: மத்திய அரசு திட்டங்கள் நேரடியாக மக்களுக்கு செல்வதால் திமுகவுக்கு கவலை ஏற்பட்டுள்ளது. வளர்ச்சி திட்டங்களில் ஊழல் செய்ய முடியவில்லை என்பது திமுகவின் வருத்தமாக உள்ளது. தமிழ்நாட்டுக்காக மத்திய அரசு அயராது பணியாற்றி வருகிறது.
வளர்ச்சி திட்டங்கள் மக்களுக்கு செல்வதால் திமுகவின் ஒரு குடும்பம் வருத்தப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டுகிறது திமுக அரசு. ஸ்டிக்கர் ஒட்டினாலும் திமுகவினருக்கு வெற்றி கிடைக்கவில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பணத்தை மோடி கொள்ளையடிக்க விடமாட்டேன். திமுக கொள்ளையடித்த பணம் தமிழ்நாட்டு மக்களுக்கே செலவழிக்கப்படும் என்பது மோடி உத்தரவாதம்." எனப் பேசியுள்ளார் பிரதமர் மோடி.












Click it and Unblock the Notifications