“அங்க பாருங்க..” கூட்டத்தில் கை காட்டிய முதல்வர் ஸ்டாலின்.. குலுங்கிக் குலுங்கிச் சிரித்த பிரதமர்!
சென்னை : சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனைய திறப்பு விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினை அருகே அழைத்துக் கையைப் பிடித்து சிரித்துப் பேசினார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தொடக்க விழாவில், பிரதமர் மோடியிடம் ஸ்டாலின் சிரித்தபடி அங்கே பாருங்க என கைகாட்டி ஏதோ சொல்ல, அதற்கு குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார் பிரதமர் மோடி.
ரூ.1,260 கோடியில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்தப் புதிய முனையம், கோலம், சேலை, கோயில்கள் போன்ற பாரம்பரிய அம்சங்களைக் கொண்ட தமிழ் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும், இயற்கையான சுற்றுப்புறத்தைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் உடன் இருந்தனர். பிரதமர் மோடி, புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பார்வையிட்டு கொண்டிருக்கும்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் சில மீட்டர்கள் இடைவெளி விட்டே வந்து கொண்டு இருந்தார்.
புதிதாக கட்டப்பட்ட முனையத்தின் மாதிரி வடிவத்தை பிரதமர் நரேந்திர மோடியிடம் அதிகாரிகள் விளக்கிக் கொண்டிருந்தனர். அப்போதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொஞ்சம் விலகி நின்று கொண்டு இருந்தார். அதை கவனித்த பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினை அருகில் அழைத்து, அவரது கையைப் பிடித்து சிரித்து பேசிக் கொண்டு இருந்தார்.

பின்னர், முதல்வர் ஸ்டாலின், பிரதமரின் கையைப் பிடித்து தன் கையால் இருமுறை தட்டிக் கொடுத்தார். பின்னர் சிரித்துக்கொண்டே அங்கே இருந்து சற்று நகர்ந்து சென்றார் மு.க. ஸ்டாலின். அப்போது பின்னால் நின்று கொண்டிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அதிகாரிகளும் சிரித்தபடி இருந்தனர்.

பின்னர் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்க சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திற்குச் சென்றபோது அங்கு மேடையில் இருந்தபடியே, பிரதமர் மோடியிடம் சிரித்தபடி அங்கே பாருங்க என ஏதோ கை காட்டிப் பேசினார் முதல்வர் ஸ்டாலின். உடனே, வெகுவாகச் சிரித்தபடியே கூட்டத்தை நோக்கி கைகாட்டி மகிழ்ச்சியை வெளிபடுத்தினார் பிரதமர் மோடி.

பாஜக அரசை நாள்தோறும் விமர்சித்து வருகிறார் தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின். எனினும், இன்று பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் இருவரும் மிகவும் நெருக்கமாக சிரித்துப் பேசியபடி அளவளாவியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications