பிரதமர் மோடியே திராவிடர்தான்.. ஹெச் ராஜா ஒரே போடு..! சொல்லியிருக்கும் காரணத்தை பாருங்க!
சென்னை: பிரதமர் மோடியே திராவிடர்தான் என்று ஹெச் ராஜா பேசினார். மேலும் தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடியவர்கள் செய்த பிழை. இதற்கு ஆளுநர் ஆர் என் ரவி எப்படி பொறுப்பேற்பார் என்றும், முதல்வர் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் மலிவான பிரசாரம் செய்கின்றனர் என்றும் அவர் கூறினார்.
பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் ஹெச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நேற்றைய தினம் தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடியவர்கள் செய்த பிழை. இதற்கு ஆளுநர் ஆர் என் ரவி எப்படி பொறுப்பேற்பார். முதல்வர் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் வேறு மாதிரி ரியாக்ட் செய்துள்ளனர்.

மலிவான பிரச்சாரத்திற்கு தமிழகத்தின் முதல் குடிமகனை அசிங்கப்படுத்துவதற்கு உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இவங்க மட்டும் மல்லாமல் அவரது கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக போன்ற இலவச இணைப்புகள் மரியாதையாக பேசுவதற்கு கற்றுக்கொள்ளுங்கள்.
திராவிடத்தை பற்றி இப்போது டிஸ்கஸ் பண்ணினோம் என்றால் நிறைய விஷயங்கள் இருக்கு. ஏற்கனவே இதைப்பற்றி பேசியிருக்கிறேன். திராவிடம் என்பது இடத்தை குறிக்கும். இனத்தை அல்ல. ஏனென்றால் தரு என்றால் சமஸ்கிருதத்தில் மரம் என்று அர்த்தம். காடுகள் நிறைந்த பகுதி. அதனால் தான் தக்காண பூமிக்கு தெற்கே இருக்கின்ற காடுகள் நிறைந்த பகுதி. இது 56 தேசங்களாக இருந்தது.
இரண்டு பெரிய நிலப்பரப்புகளாக இருந்தது. பஞ்ச திராவிடம். இதில் முதல் மாநிலமே என்ன சொல்லியிருக்கு தெரியுமா?.. குர்ஜரம்.. குஜராத். இதனால் இந்த நாட்டின் பிரதமராக இருக்கக்கூடிய நரேந்திர மோடியே திராவிடர் தான். இதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். இப்போதும் சொல்றேன். தமிழ் தேசிய இயக்கத்தில் பலர் இருக்கிறார்கள். அவங்களே சொல்றாங்க. என்சைக்கிலோபிடியா பிரிட்டானியாவில் சொல்லியிருக்காங்க. இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில், தொலைக்காட்சி பொன் விழாவுடன் இந்தி மொழி மாதம் கொண்டாட்டத்தின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்என்ரவி பங்கேற்றார். இந்த விழா தொடங்கும் போது, தேசிய கீதத்தை தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதில் , “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரி இடம் பெறாமல் பாடப்பட்டது.
'திராவிடம்’ என்ற சொல்லை வேண்டும் என்றே ஆளுநர் விழாவில் தவிர்த்து இருப்பதாக சர்ச்சை எழுந்து இருக்கிறது. உடனடியாக முதல்வர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். இதற்கு உடனடியாக ஆளுநரும் பதில் கொடுத்தார். இதனிடையே, துர்தர்ஷன் இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்தது.
தூர்தர்ஷன் கூறுகையில், “ தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது கவனச்சிதறல் காரணமாக ஒரு வரி தவறிவிட்டது. கவனக்குறைவாக நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். தமிழையோ, தமிழ்த்தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை. இந்த விஷயத்தில், கவர்னருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்தது.












Click it and Unblock the Notifications