ஆறுபடை கோயிலுக்கு சென்றாலும் கூட.. பிரதமர் மோடியை முருகன் மன்னிக்க மாட்டார்.. செல்வப்பெருந்தகை
சென்னை: திருப்பரங்குன்றம் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் ஆறுபடை வீடுகளுக்கும் பிரதமர் மோடி சென்றாலும், முருகன் அவரை மன்னிக்க போவதில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். ஆர்எஸ்எஸ், பாஜகவின் முகமாக பிரதமர் மோடி இருப்பதாக கூறிய செல்வப்பெருந்தகை, என்டிஏ கூட்டணியால் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
மதுரை மண்டேலா நகர்ப் பகுதியில் என்டிஏ கூட்டணியின் பொதுக்கூட்டம் நடக்கவுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் இந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அன்புமணி உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர். இந்தப் பொதுக்கூட்டத்திற்கு முன்பாக பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொள்ளார்.

இதனால் திருப்பரங்குன்றம் கோயில் பகுதியில் உச்சக்கட்ட பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தால் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்று தரிசனம் மேற்கொள்வது தேர்தலில் பின்னடைவை உருவாக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் திருப்பரங்குன்றம் கோயில் விசிக் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தும் திட்டங்கள் உலகம் முழுவதும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை அபூர்வமான தலைவர்கள் உருவாகுவார்கள். அப்படி தமிழ்நாட்டில் அபூர்வ தலைவராக ஸ்டாலின் இருக்கிறார்.
தொடர்ந்து, பிரதமர் மோடி சர்ச்சையை ஏற்படுத்தக் கூடியவர்.. சர்ச்சையான பிரச்சனைகளை கையில் எடுப்பதும், மதக்கலவரங்களை ஏற்படுத்துவதும், அனைத்து மக்களும் அமைதியாக வாழ்வதை அனுமதிக்க முடியாது என்று கங்கணம் கட்டி இருக்கும் ஆர்எஸ்எஸ், பாஜகவின் முகமாக பிரதமர் மோடி இருக்கிறார்.
அவர் ஒருமுறை இல்லை.. இன்னும் எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் அதிமுக - பாஜகவுக்கு இடமில்லை. அவர் 100 முறை வந்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார். அவர் திருப்பரங்குன்றம் மட்டுமல்ல.. தமிழ்நாட்டில் ஆறுபடை கோயில்களுக்கு சென்றாலும் மோடியை முருகன் மன்னிக்க மாட்டார். அதேபோல் தமிழ்நாட்டில் என்டிஏ ஆட்சி அமைய வாய்ப்பே இல்லை.
தமிழ்நாட்டில் மக்களால் அதிமுக - பாஜக கூட்டணி பலமுறை புறக்கணித்துவிட்டது. இம்முறை அதிமுக முகமூடியுடன் பாஜக வருகிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் விட்டுக் கொடுத்துவிட்டார். அதனால் மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்று மக்களுக்கு தெரியும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications