இட்லி, வடை, சாம்பார் ஓகே.. ஆனால் தமிழர் மனங்களை வெல்ல இது போதுமா.. மோடி பேச்சில் மயங்குமா தமிழகம்?
இட்லி, வடை பிடிக்கும் என்பதால் மோடி சொல்ல வருவது என்ன என தெரியவில்லை
Recommended Video
சென்னை: எனக்கு இட்லி, வடை, சாம்பார் பிடிக்கும் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.. இதிலிருந்து என்ன சொல்ல வருகிறார் மோடி? இட்லி, வடை, சாம்பார்...ன்னு சொன்னால் தமிழக மக்கள் மனதில் இடம் கிடைத்து விடுமா? மில்லியன் டாலர் கேள்வி இது.
பாஜக மீதான அதிருப்தி மக்களுக்கு இன்னமும் குறையவில்லை.. ஏற்கனவே இருக்கும் அதிருப்திகள் போதாமல், எப்போ, என்ன மாதிரியான அறிவிப்புகளை மத்திய அரசு கொண்டு வருமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
ஆனால் சமீப காலமாகவே தமிழை கொஞ்சுகிறார்கள்.. தமிழை பாராட்டுகிறார்கள்.. ஏன் என்றுதான் தெரியவில்லை. தமிழின் மேன்மை பற்றி பேசினால் எதாவது எடுபடும் என்று யாராவது பாஜக தரப்புக்கு எடுத்து சொல்லி இருப்பார்கள் போலும். ஆனால், ஆயிரக்கணக்கான வருடங்களாக இருக்கும் தமிழ் மொழி மீது திடீரென இந்த மாசம் மட்டும் அதீத பற்றுக்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை.

அதீத பாசம்
தமிழ் மொழி மீதுதான் பற்றா அல்லது தமிழ்நாட்டு மக்கள் மீதும் பற்றா என்றும் புரியவில்லை. இதில் முக்கியமானது.. அடிப்படையாகவே தமிழ் மக்கள் தங்கள் மொழி மீது பாசம் காட்டுவோரை தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள்.. ஆனால் அதில் உண்மையாக இருந்தால் மட்டுமே.. இல்லாவிட்டால் நம்ப மாட்டார்கள். இந்த அடிப்படையை பாஜகவினர் புரிந்து வைத்துள்ளனரா என்று தெரியவில்லை. புரிந்துள்ளது போலவும் தெரியவில்லை.

காவிரி டெல்டா
தமிழக மக்கள் மீது பாசம் என்றால், தமிழக வளங்கள் சூறையாடப்பட்டிருக்காது.. படேல் சிலைக்கு 900 கோடியும், கஜா புயலுக்கு 350 கோடியும் ஒதுக்கப்பட்டிருக்காது.. மாநில உரிமைகளை கையில் எடுத்து மொழி திணிப்பு வரை பாஜக சென்றிருக்காது.. முக்கியமாக காவிரி டெல்டா காவு கொடுக்கப்பட்டிருக்க மாட்டாது என்பதே! பிரதமருக்கு, ஒருவேளை தமிழ் மீதுதான் பற்று என்றால், கீழடி ஆய்வு சம்பந்தமான எல்லா முயற்சிகளையும் பாஜக ஏன் அன்றே கையில் எடுக்கவில்லை என்ற சந்தேகமும் எழுகிறது.

தமிழ் பேச்சு
அப்படியானால், மோடி இன்று இட்லி தோசை, சாம்பார் பற்றி பேசவும், தமிழ் தொன்மையான மொழி என்று கூறவும் என்ன காரணம்? வரும் தேர்தலை கணக்கு செய்கிறதா? அல்லது உணர்ச்சிபூர்வமாக பேசினால் தமிழர்கள் விழுந்துவிடுவார்கள் என்பதினாலா? மொழி திணிப்பு காயத்துக்கு மருந்து என்று இந்த பேச்சினை எடுத்து கொள்வதா? தெரியவில்லை. அப்படியானால் இன்று சென்னையில் விமான நிலைய வரவேற்பில் பேசும்போது தமிழிலேயே அவர் பேசியிருக்கலாம்

இந்துத்துவா
மறைந்த வாஜ்பாய்க்கு தமிழ்மேல் இருந்த மரியாதையே தனி. தமிழையும், தமிழர்களையும் வெகுவாக மதித்தார்.. தமிழ்நாட்டுக் காரர்களில் 99 சதவீதம் பேருக்கு இந்தி பிடிக்காது என்று தெரிந்தும் கூட அவர் தமிழர்களை மதித்தார்.. தனது செயலிலும் அதை அவர் காட்டினார். அன்று அவருக்கிருந்த இந்த மரியாதையை இதே இந்துத்துவா அன்று நேரடியாக பார்த்து வாயடைத்தும் போனது. வாஜ்பாயின் பாசத்தில் ஒரு நேர்மையும், வெளிப்படையும் இருந்ததே தமிழ்நாடு மக்கள் வாஜ்பாயை விரும்பவும் முக்கியக் காரணம்.

வாய்ஜாலம்
அதனால் இப்போது தமிழ் மொழியை முன்வைத்து பேசும் பேச்சுக்கள் எந்தளவுக்கு தமிழக மக்களிடம் எடுபடும் என்று தெரியவில்லை. காரணம், தமிழக மக்களுக்கு கழுத்தளவுக்கு பிரச்சினைகள் உள்ளன.. அதில் பாதிக்கும் மேலானவை மத்திய பாஜக அரசால் ஏற்பட்டவை அல்லது காரணமானவை. எனவே வெறும் வாய்ஜாலத்தை நம் மக்கள் ஏற்பார்களா என்பது சந்தேகம்தான்.

குப்பை கொட்ட முடியாது
அதே சமயம்.. தமிழைத் தொடாமல் தமிழகத்தில் யாரும் குப்பை கூட கொட்டவும் முடியாது... அந்த வரைக்கும் பாஜக உணர்ந்துள்ளது.. இதை மட்டும் நம்பலாம்... அதாவது ஒரு சதவீத அளவுக்கு தமிழக மக்களை பாஜக புரிந்து வைத்துள்ளது.. இன்னும் அது போக வேண்டிய தூரமானது 99 சதவீதமாகும்!












Click it and Unblock the Notifications