அம்பேத்கர் வழியில் சீர்திருத்தங்களை செய்கிறார் பிரதமர் மோடி - அமைச்சர் எல்.முருகன் பேச்சு!
சென்னை : அம்பேத்கர் வழியில் சீர்திருத்தங்களைச் செய்து வருகிறார் பிரதமர் மோடி என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 66வது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், இன்று சென்னையில் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எல்.முருகன், அம்பேத்கர் வழியில் பல்வேறு சீர்திருத்தங்களை பிரதமர் மோடி செய்து வருகிறார். அம்பேத்கர் வாழ்ந்த 5 இடங்களை புனித தலங்களாக்கி பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார் என எல்.முருகன் தெரிவித்தார்.
வானதி + முருகன் + அண்ணாமலை.. சேர்ந்து வந்த தலைகள்.. ஆர்எஸ்எஸ் கூட்டம்.. தடை போட்ட ஸ்டாலின்.. அதிரடி!
அம்பேத்கர் சிலை
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அண்ணல் அம்பேத்கரின் முழு உருவ வெண்கலச் சிலை திறக்கும் நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அம்பேத்கர் உருவச் சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மத்திய இணை அமைச்சர்கள் எல்.முருகன், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வெளியே கொண்டு வந்தது பாஜக
இந்த நிகழ்வில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், "அம்பேத்கரின் பெருமைகளை வெளியுலகத்திற்குக் கொண்டு வந்தது பாஜக. அம்பேத்கர் சிலை மூடி வைக்கப்பட்டிருப்பது தலைகுனிவு ஏற்படுத்தும் விஷயமாகும். பிரதமர் மோடி பதவி ஏற்கும்போது அம்பேத்கரின் இந்திய அரசியலமைப்புச் சட்டம் தான் தன்னுடைய புனித நூல் என்று சொல்லி பதவியேற்றுக் கொண்டார்.
மோடி ஆட்சிக்கு வரும் முன்
2014 இல் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அம்பேத்கர் பிறந்த வீடு என்பது இந்த உலகத்திற்கு தெரியாமல் இருந்தது. அது ஆக்கிரமிப்பில் இருந்தது. அம்பேத்கருடைய 125 ஆவது பிறந்த தினத்தை நமது மத்திய அரசு கொண்டாடியது. அந்த நேரத்தில் அவர் பிறந்த இடம் மற்றும் அம்பேத்கர் டெல்லியில் மறைந்த இடம் என இந்த இரண்டு இடங்களையும் புனரமைத்து மிகப்பெரிய நினைவில்லம் அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மாபெரும் தலைவர் மோடி
அதேபோல் அம்பேத்கர் லண்டனில் படித்தபோது வசித்த வீடு, அதுவும் அடையாளம் காணப்படாமல் இருந்தது. அம்பேத்கர் மும்பையில் இருந்த இடம், அம்பேத்கர் தீட்சை எடுத்த நாக்பூர் என இந்த ஐந்து இடங்களையும் புனிதத் தலங்களாக அறிவித்து ஒரே வருடத்தில் மேம்படுத்தி இந்த நாட்டிற்கு அர்ப்பணித்த மாபெரும் தலைவர் பிரதமர் மோடி" எனப் பேசினார்.
எல்.முருகன் மரியாதை
தொடர்ந்து, அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி சென்னை துறைமுகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த மிகப்பெரிய சிற்பியான அண்ணல் அம்பேத்கர், பொருளாதார நிபுணராகவும், நீர்நிலை மேலாண்மையில் வல்லுனராகவும் விளங்கியவர் என்றார்.
அம்பேத்கர் வழியில் மோடி
அம்பேத்கர் வழியில் பல்வேறு சீர்திருத்தங்களை பிரதமர் மோடி செய்து வருகிறார். அம்பேத்கர் பிறந்த இடம், லண்டனில் அவர் படித்த வீடு, மும்பையில் வாழ்ந்த இல்லம், அவர் டெல்லியில் மறைந்த இடம் உள்பட அம்பேத்கரின் 5 இடங்களை புனித தலங்களாக்கி பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார் எனத் தெரிவித்தார்.