மதுரையில் மோடி.. வந்தார்.. பேசினார்.. போனார்... வேற ஒன்னும் விசேஷம் இல்லை!
எதிர்பார்த்த அளவில் மோடியின் வருகை பேசப்படவில்லை.
Recommended Video

சென்னை: வந்தார்.. போனார்... வேற ஒன்னுமே இல்லை.. இதுதான் பிரதமர் மோடியின் மதுரை வருகையின் முக்கிய சாராம்சம் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல்லை நாட்டி, சில விஷயங்களையும் மோடி பேசினார். தேவேந்திர குல வேளாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கப்படும் என்று சொன்னதைகூட அவர்களின் வாக்குகளை பெறுவதற்கான ஒரு விஷயமாக எடுத்து கொண்டாலும் மற்ற பேச்சுக்கள் எல்லாம் எதுவும் மனசில் ஒட்டவில்லை.
தமிழ்நாட்டில் மொத்தம் 47 லட்சம் கழிவறைகள் கட்டி தந்துள்ளது என்று மோடி சொல்லிதான் நமக்கே தெரியவருகிறது. இத்தனை கழிவறைகள் நமக்கே தெரியாமல் எங்கு உள்ளன, எப்போது கட்டி முடிக்கப்பட்டன தூய்மை இந்தியா சாதனையை சொல்வதற்காக இந்த புள்ளி விவரத்தை பிரதமர் சொன்னாரா என்று தெரியவில்லை.

யாரை சொல்கிறார்?
அடுத்தது "பாஜக அரசு மீது ஊழல் புகார் இல்லை. நாட்டை கொள்ளையடித்தவர்கள் யாராக இருந்தாலும் விடமாட்டோம். எங்கிருந்தாலும் அவர்களை கொண்டுவந்து நீதியின் முன்னர் நிறுத்தியே தீருவோம்" என்றார். அம்பானி சகோதரர்கள், நீரவ் மோடி, விஜய் மல்லையாவைதான் மோடி சொல்கிறாரா என்றுகூட நம்மால் எடுத்து கொள்ள முடியாது.

ஊழல்வாதிகள்?
மேலும் தமிழகத்தில் கூட்டணி வைக்க போவதாக சொல்லப்படும் கட்சிகளுக்கும் பிரதமரின் இந்த வார்த்தைகளுக்கும் துளியும் சம்பந்தப்படுத்தவும் முடியாது. அதனால் "ஊழல் புரிந்தவர்களை விடவே மாட்டோம்" என்று சொன்னது யார் என்று தெளியவில்லை. எதுவானாலும், மே மாதத்திற்கு பிறகு ரபேல் விமான தயாரிப்பு ஊழல் சம்பந்தமான நடவடிக்கைகளில் பிரதமர் ஊழல் பேச்சின் அர்த்தம் தெளிவாக வெளிப்படும் என்று வேண்டுமானால் எதிர்பார்க்கலாம்.

10 சதவீத இடஒதுக்கீடு
அடுத்ததாக "10 சதவீத இட ஒதுக்கீட்டால் தற்போது நடைமுறையில் இருக்கும் தலித்துகள், பழங்குடியினர் உள்ளிட்டோருக்கான இட ஒதுக்கீட்டு முறையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது" என்று சொல்லி இருக்கிறார். மத்திய பிரதேச தேர்தலில் 5 லட்சத்துக்கும் மேல நோட்டு வாக்கு விழ காரணமே உயர்ஜாதியினர் என தெரிந்தும், அவர்களது நன்மதிப்பைப் பெறுவதற்காக 10 சதவீத இடஒதுக்கீட்டை நல்ல பெயரை சம்பாதித்து பாஜக முயன்றது என்பது நம்ம மதுரைக்காரங்களுக்கு தெரியாமலா இருக்கும்??

இலவச மருத்துவம்
இன்னொரு விஷயம், இந்த எய்ம்ஸ் மருத்துவமனையால் சாமான்ய மக்களும் உயர்தர சிகிச்சை பெறலாம் என்று சொல்லி உள்ளார். இது தெரிந்தும்தான் நான்கரை வருடம் கழித்து அடிக்கல் நாட்ட வந்தாரா என்பது ஒரு புறம் இருந்தாலும், தமிழ்நாட்டில் 60 களிலேயே இலவச மருத்துவம் என்பது புழக்கத்தில் உள்ள ஒன்று. இந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டால் எத்தனை வடநாட்டுக்காரர்கள் அதாவது ஹிந்தி மொழி பேசும் டாக்டர்கள், ஊழியர்கள் அமர்த்தப்படுவார்கள் என்பது நம் மாநில மக்களுக்கு இப்போதே கவலையை தந்துவிட்டது.

கவலைப்பட்டாரா?
கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான், தமிழ் எனக்கு மிகவும் பிடித்தமான மொழி என்று பிரதமர் சொல்லி இருந்தார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் அதுவும் அரசு நடத்தும் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்படவில்லையே... ஏன் என்றாவது கேட்டாரா? இதை பற்றி பிரதமர் கொஞ்சமாவது கவலைப்பட்டாரா?

ஒரு பெருமையும் இல்லை
மொத்தத்தில் எட்டு வழி சாலை, ஸ்டெர்லைட், கஜா நிவாரண பாதிப்பு என இப்படிப்பட்ட விஷயங்கள் எதுவுமே தமிழகத்தில் நடக்கவே நடக்காத மாதிரி, வேற விஷயங்களை மட்டும் பேசி உள்ளதால், மோடியின் இந்த மதுரை வருகை ஒன்னும் சொல்லிக் கொள்கிற மாதிரியும் இல்லை, நினைச்சு பெருமைபட மாதிரியும் எதுவும் நடக்கவில்லை.












Click it and Unblock the Notifications