சளைக்காமல் திரும்பத் திரும்ப வரும் மோடி.. அலுக்காமல் கோ பேக் சொல்லும் தமிழகம்.. ஏன்?
Recommended Video
சென்னை: எத்தனை முறை "கோ பேக் மோடி" என்று சொன்னாலும் சளைக்காமல் தமிழர்களின் மீது பாசம் காட்டும் பிரதமர் நரேந்திர மோடியின் அன்பை இங்குள்ளோர் புறம் தள்ளுகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு பாதிப்பில் அவர்கள் உள்ளனர் என்றே அர்த்தம். அதை சரி செய்தால் தற்போது மோடி காட்டும் அன்பை தமிழக மக்கள் நிச்சயம் முழுசாக ஏற்பார்கள்.
எத்தனை முறை கோபேக் மோடி என்று சொன்னாலும் சளைக்காமல் தமிழர்களின் மீது பிரதமர் மோடி பாசம் காட்டுகிறார். ஆனால் சீன அதிபரை வரவேற்று போட்ட டுவிட் பதிவுகளில் பாதிகூட மோடியை வரவேற்று தமிழகத்தில் டுவிட் பதியப்படவில்லை என்பது எதார்த்தமான உண்மை.
அதேநேரம் சீன அதிபரை வரவேற்று போட்ட டுவிட்டை விட இந்தியாவில் டுவிட்டரில் டாப் டிரெண்டிங்காக கோ பேக் மோடி இருந்ததும் உண்மை.

பாசம் வைக்க காரணம்
ஆனாலும் ஐநாவில் தொடங்கி ஒவ்வொரு சந்தர்பங்களிலும் தமிழ் மீதும் தமிழர்கள் மீது அன்பை பொழிந்து வருகிறார். அவருக்கு தமிழர்கள் மீது இவ்வளவு பாசம் ஏற்பட காரணம் அவர் குஜராத்தில் முதல்வராக இருந்த காலத்தில் இருந்தே தொடங்கியது. குஜராத்தில் ஏராமான தமிழ் ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்களுடன் பழகியதால் தான் மோடியின் தமிழர்களின் மீது பாசம் வைக்க காரணம்.

நெவர் கிவ்அப்
மோடியின் வரலாற்றை தமிழ் சினிமா பாணியில் சொல்வதென்றால் "என் வாழ்க்கையில ஒவ்வாரு நிமிசமும்.. ஒவ்வொரு நிமிசத்தையும் நானா செதுக்குனதுடா".. என்ற அஜித் வசனம் மனத்துக்குள் வந்து போகிறது, அத்துடன் "தோத்துட்ட தோத்துட்ட என்று உலகமே உன் முன்னாடி வந்து சொன்னாலும், நீயா தோல்வியை ஒப்புக்கொள்ளுமாறு தோல்வி கிடையாது என்று அஜித்தன் நெவர் கிவ்அப்" வசனமும் மோடியை பார்த்தால் நிச்சயம் நினைக்க தோன்றும்.

தோற்ற மாநிலம் தமிழகம்
அதற்கு காரணம் குஜராத் கலவரத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் மோடி. அதைத்தொடர்ந்து 2015ம் ஆண்டு ரூபாய்நோட்டு செல்லாமல் போன போதும் மிகக்கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஜிஎஸ்டியை கொண்டுவந்தபோது என ஒவ்வொருமுறையும் மோடியை பலர் விமர்சித்தாலும் அவர் துவண்டுபோகவில்லை. ஆனால் அதையும் மீறி மிகப்பெரிய வெற்றியை லோக்சபா தேர்தலில் பெற்றார். அதற்காக மோடியின் உழைப்பு நிச்சயம் அசாத்தியமானது. ஆனால் கடுமையாக உழைத்தும் அவரது கட்சி மோசமாக தோற்ற மாநிலம் என்றால் தமிழகம் தான்.

மோடியின் முயற்சி
ஆனாலும் மனம் தளராத மோடி, விடாமல் தமிழ், தமிழர் என்று ஐநாவில் தொடங்கி எங்கு பார்த்தாலும் தமிழகத்தின் பெருமைக்கு உலகுக்கு பறைசாற்றி வருகிறார். சீன அதிபரை சந்திக்க மாமல்லபுரத்தை தேர்வு செய்தது பிரதமர் மோடி என்பது பலருக்கும் தெரியாது. அவர் தமிழர்களின் அன்பை பெற கடுமையாக முயற்சித்து வருகிறார்.

ஒரு நாள் ஏற்பார்கள்
ஆனால் அதையும் மீறி இத்தனை தடவை கோ பேக் சொல்கிறார்கள் என்றால் அந்த அளவுக்கு தமிழக மக்களுக்கு , தமிழகத்தின் பிரச்சினைகளில் அதிமுக ஆட்சியாலும், மத்திய அரசின் செயல்பாடுகளாலும், பாஜகவினராலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். அதை சரி செய்தால் பிரதமர் தற்போது சளைக்காமல் காட்டும் அன்பை தமிழக மக்கள் நிச்சயம் ஏற்பார்கள். அவர்களுக்கு நிவாரணம் கிடைக்காத வரை அந்த அன்பை அவர்கள் புறம் தள்ளவே செய்வார்கள்.












Click it and Unblock the Notifications