தமிழகம் வரும் பிரதமர் மோடி.. மருத்துவமனையில் இருந்து கோரிக்கை மனு அனுப்பிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: பிரதமர் 2 நாள் சுற்றுப் பயணமாக தமிழகத்திற்கு இன்று இரவு வருகிறார். தூத்துக்குடி விமான நிலையம் திறப்பு விழா, கங்கை கொண்ட சோழபுரம் ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்கவுள்ளார். முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பிரதமருக்கு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அனுப்பியுள்ளார்.
தமிழகத்திற்கு 2 நாள் சுற்றுப் பயணமாக மோடி இன்று இரவு 7.50 மணிக்கு மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி வருகிறார். இரவு 8 மணியளவில் நடைபெறும் விழாவில் பங்கேற்று விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். ரயில்வே துறையில் நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள், நெடுஞ்சாலைத் துறை பணிகள் உள்ளிட்ட ரூ. 4 ஆயிரத்து 800 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளைத் தொடங்கிவைக்கவுள்ளார்.

விழா முடிந்து தனி விமானம் மூலம் இரவு 10.30 மணியளவில் பிரதமர் திருச்சி செல்வுள்ளார். ஞாயிற்றுக்கிழமை அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்று, ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடவுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் நடைப் பயிற்சியின்போது தலைசுற்றல் ஏற்பட்ட நிலையில் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஸ்டாலினுக்கு தலைசுற்றல் ஏற்பட்டதற்கு, சீரற்ற இதயத் துடிப்பு இருந்ததே காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தவாறே முக்கியப் பணிகள் மற்றும் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். பிரதமர் தமிழகத்தில் 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ளார்.
இதுகுறித்து, முதல்வர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: மருத்துவமனையில் இருப்பதால் தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமரிடம் வழங்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவைத் தலைமைச் செயலாளர் மூலமாகக் கொடுத்து அனுப்பியுள்ளேன். அமைச்சர் தென்னரசு பிரதமர் அவர்களிடம் வழங்குவார் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications