கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயம் வெளியிடும் மோடி.. இளையராஜா கச்சேரியும் உண்டு
சென்னை: கங்கைகொண்ட சோழபுரத்தில் ஜூலை-27ம் தேதி ராஜேந்திர சோழனின் ஆயிரம் ஆண்டு விழா நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிட உள்ளார்.
அரியலூர் மாவட்டத்தின் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம், யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய சின்னமாகும். இதை ராஜேந்திர சோழன் கட்டினார். ராஜேந்திர சோழன் கங்கை சமவெளியை வென்று ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இங்கு வரும் 27ம் தேதி ஆயிரம் ஆண்டு விழா நடக்க இருக்கிறது.

இந்த விழாவில், கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டு கவுன்சில் அறக்கட்டளையின் தலைவர் ஆர். கோமகனின் வேண்டுகோளை ஏற்று, பிரதமர் மோடி நினைவு நாணயத்தையும் வெளியிட இருக்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு கோயில் நகரமும் அதன் சுற்றுப்புறமும் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
ஜூலை 23 முதல் 27 வரை கோவிலில், ராஜேந்திர சோழனின் படையெடுப்பு, வெற்றிக் கோப்பைகள் மற்றும் சைவ சிவனடியார் சிலைகள் குறித்த கண்காட்சி நடைபெற உள்ளது. இசை அமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடி முன்னிலையில் 20 நிமிட இசை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்.
கங்கை கொண்ட சோழபுரம் - வரலாறு
கொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைந்துள்ள கங்கை கொண்ட சோழபுரம், சுமார் 250 வருடங்கள் சோழர்களின் தலைநகராக இருந்தது. சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, இந்த நகரத்தின் பெருமை மெல்ல குறைந்தது. 1855 ஆம் ஆண்டில் வெளியான 'தென்னிந்திய கெஜட்' எனும் அறிக்கையில், கங்கைகொண்ட சோழபுரம் பண்டைய பாபிலோனுடன் ஒப்பிடப்பட்டது என்று கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் 'தி சோழாஸ்' என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கொள்ளிடம் ஆற்றின் அருகாமையில் ஒரு மிகப் பெரிய மற்றும் விலை உயர்ந்த வேலைப்பாடுகளுடன் கூடிய கோபுரம் இருந்ததாகவும், அதைச் சுற்றிலும் காடுகளால் சூழப்பட்டு, பண்டைய கட்டிடங்களின் சில எச்சங்கள் இருந்ததாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இது பண்டைய பாபிலோன் இருப்பிடத்தைக் குறிக்கும் குன்றுகள் மற்றும் குவியல்களை போல தோற்றமளிக்கின்றன என்றும், ஆனால் உள்ளூர் மக்கள், இந்த இடத்தில் இதற்கு முன்னர் பெரிய அரண்மனை இருந்தது என்றும் கூறியதாக அறிக்கை தெரிவிக்கிறது.
1832 ஆம் ஆண்டில், கீழ் கொள்ளிடம் அணைக்கட்டு கட்டப்பட்ட போது, பிரிட்டிஷாரால் அரண்மனையின் வெளிப்புற சுவர் முழுவதுமாக இடிக்கப்பட்டதும், உட்புறச் சுவர் பகுதியளவு இடிக்கப்பட்டதும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிட்டிஷ்காரர்களின் இந்த செயலை கண்டித்து உள்ளூர் மக்கள் குரல் எழுப்பியிருந்தனர். இடிக்கப்பட்ட கல் சுவருக்கு பதிலாக செங்கல் சுவர் எழுப்பி தரப்படும் என்று ஆங்கிலேயர்கள் வாக்குறுதி அளித்திருக்கின்றனர். ஆனால் அது கடைசி வரை நிறைவேற்றப்படவே இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications