அமைச்சர் விஜயபாஸ்கரை தட்டிக்கொடுத்த மோடி... வட்டமடிக்கும் வதந்தி
சென்னை: சென்னை விமானநிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை மட்டும் பிரதமர் மோடி இடது கையால் தோளில் தட்டிக்கொடுத்ததை அடுத்து காலை முதலே வதந்திகள் வட்டமடிக்க தொடங்கியுள்ளன.
ஐஐடி பட்டமளிப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி இன்று காலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் ஒட்டுமொத்த அமைச்சரவையும் திரண்டு நின்று வரவேற்பு அளித்தது. அமைச்சர்கள் வரிசையில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகமும் நின்று மோடியை வரவேற்றார்.

விமானத்தை விட்டு இறங்கிய மோடிக்கு ஆளுநர் மரியாதை செய்ததை அடுத்து, இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். அவர்களை தொடர்ந்து தம்பிதுரை, மற்றும் அமைச்சர்கள் கையில் ஒற்றை ரோஜாவுடன் நின்று மோடியை வரவேற்க நின்றனர்.
அமைச்சர்களிடம் விறுவிறுவென ரோஜாப்பூவை கையில் வாங்கிக்கொண்டு வேகமாக வந்த பிரதமர் மோடி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அருகே வந்த போது மட்டும், அவர் அளித்த ரோஜாவை வாங்கியதோடு தனது இடது கையால் விஜயபாஸ்கரின் தோளில் ஓங்கி தட்டிக்கொடுத்து சிரித்தார். இது தான் அரசியல் களத்தில் இன்று காலை முதலே பெரும் பேசு பொருளாக உள்ளது.
மோடி ஒருவரை இடதுகையால் தட்டிக்கொடுக்கிறார் என்றால் அவருக்கு சிக்கல் வரப்போகிறது என அர்த்தம் என்று சமூக வலைத்தளங்களில் சிலர் கொளுத்திப்போட அது றெக்கை கட்டி பறக்கிறது. ஜெயலலிதா மறைவின் போது இப்படித்தான் சசிகலா தலையில் மோடி இடது கையால் தடவி ஆறுதல் கூறியதும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இதனிடையே விஜயபாஸ்கர் குட்கா வழக்கில் ஏற்கனவே விசாரணையை எதிர்கொண்டு வரும் நிலையில் இன்று காலை நடந்த சம்பவத்தை அப்படி சாதாரண நிகழ்வாகவும் கருதிவிட முடியவில்லை.












Click it and Unblock the Notifications