புத்தாண்டு நாளில் ரூ. 2000 - 11கோடி60 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும் மோடி
புத்தாண்டு நாளில் பிரதமர் மோடி புத்தாண்டு தினத்தன்று 2 ஆயிரம் ரூபாயை 11.60 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த உள்ளார்.
சென்னை: விவசாயிகளுக்கான 2000 ரூபாய் நிதியுதவியை 10வது தவணையாக புத்தாண்டு அன்று பிரதமர் மோடி வழங்க உள்ளார். 11கோடி60 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 2 ஆயிரம் ரூபாயை செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்கீழ், தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 மூன்று தவணைகளாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது. இந்தப்பணம் விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் ஏறத்தாழ 11 கோடியே 60 லட்சம் விவசாயிகள் பலன் அடைகிறார்கள்.

இந்த திட்டத்தின் கீழ் இதுவரைக்கும் 9 தவணைகளாக நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புத்தாண்டு அன்று 10வது தவணையாக நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின்கீழ் அடுத்த தவணையை புத்தாண்டு தினத்தன்று நண்பகல் 12 மணிக்கு பிரதமர் மோடி வழங்குகிறார். இந்த தொகையை அவர் 11 கோடியே 60 லட்சம் விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் நேரடியாக செலுத்துகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், அடிமட்டத்தில் இருக்கும் விவசாயிகளை அதிகாரப்படுத்த வேண்டுமென்ற உறுதிப்பாட்டுக்கு ஏற்ப, பிரதமர் மோடி, பிரதமரின் உழவர் கவுரவ நிதித் திட்டத்தின் கீழ் 10 வது தவணை நிதியுதவியை 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி பகல் 12.30 மணியளவில் காணொலிக் காட்சி மூலம் விடுவிக்கிறார். இந்தத் திட்டத்தில் இதுவரை ரூ.1.6 லட்சம் கோடிக்கும் மேல் உதவித் தொகை விவசாயக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் போது பிரதமர், சுமார் 351 விவசாய உற்பத்தி அமைப்புகளுக்கு ரூ.14 கோடிக்கும் மேற்பட்ட தொகை பங்கு மானியமாக விடுவிப்பார். இதன் மூலம் 1.24 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவார்கள்.

இந்த நிகழ்ச்சியின் போது பிரதமர் விவசாய உற்பத்தி அமைப்புகளை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடுவதுடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். மேலும் 10 ஆயிரம் விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி 2027-28 வரையில் 10 ஆயிரம் புதிய விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்கி மத்திய அரசு மேம்படுத்துகிறது. இதற்கு பட்ஜெட்டில் ரூ.6,865 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கும் புத்தாண்டு தினத்தன்று பிரதமர் மோடி மானியத்தை விடுவிக்கிறார். இதற்கான அறிவிப்பு, மத்திய விவசாய மந்திரி நரேந்திர சிங் தோமர் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications