தமிழ்நாட்டில் மேலும் 2 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை! பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
சென்னை: தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு முக்கிய நகரங்களுக்கு ஏற்கெனவே 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது மேலும் கூடுதலாக, எழும்பூர்-நாகர்கோவில், மதுரை-பெங்களூர் வழித்தடத்தில் 2 வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் இந்தியன் ரயில்வே முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இந்தியன் ரயில்வேயில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்து கொண்டு புதுப்பொலிவுடன் இருந்து வருகிறது. 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கும் இந்தியன் ரயில்வே ஆண்டுக்கு சுமார் 500 கோடி பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. இந்நிலையில் ரயில் சேவையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல சமீபத்தில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த ரயில் முக்கிய நகரங்களை இணைக்கும். அதேபோல அதிவேகம் மற்றும் நவீன வசதிகளை கொண்டிருப்பதால் மக்கள் மத்தியில் இந்த ரயில் சேவைக்கு பெரும் வரவேற்பு இருந்தது. முதன் முதலாக டெல்லியிலிருந்து 759 கி.மீ தொலைவில் உள்ள உத்தரப் பிரதேசத்தின் வாரணாசிக்கு இயக்கப்பட்டது. மொத்தம் 16 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் இருக்கை வசதி மட்டுமே இருக்கும். எடை குறைவான இந்த ரயில் கவாச் ரயில் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த ரயில் இயக்கப்பட்டதால் அதேபோல மிகுந்த வரவேற்பையும் பெற்றிருக்கிறது. அதிகபட்சமாக 180 கி.மீ வேகத்தில் இயங்கும் இந்த ரயில் சில குறிப்பிட்ட நிறுத்தத்தில் மட்டுமே நின்று செல்லும். இந்த ரயில் சேவையை நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு மாநிலங்களில் தொடங்கி வைத்து வருகிறார். தமிழகத்தை பொறுத்த அளவில் சென்னை-நாகர்கோவிலுக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை கடந்த ஜனவரி மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.
ஆனால் இந்த ரயில் ஜனவரி 25ம் தேதியுடன் தனது பயணத்தை நிறுத்திக்கொண்டது. ஏற்கெனவே, சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவதால், நாகர்கோவிலுக்கான சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சென்னை-நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை தொடர்ச்சியாக நீட்டிக்க புதிய ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மட்டுமல்லாது, மதுரை - பெங்களூரு வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பது, இரு நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. எனவே, இதனை பூர்த்தி செய்யும் வகையில், புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். இரண்டு ரயில் சேவையையும் பிரதமர் மோடி, காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
சென்னை சென்ட்ரலிலிருந்து ஆளுநா் ஆா்.என் ரவி, மத்திய செய்தி ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் எழும்பூர் - நாகர்கோவில் இடையே இயங்கும் வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த ரயில் தொடக்க நாளில் மட்டுமே சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும். மற்ற நாட்களில் எழும்பூரிலிருந்து இயக்கப்படும்.
அதேபோல மதுரையில் இருந்து மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் வீ.சோமண்ணா மதுரை - பெங்களூரு இடையே இயங்கும் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார். இந்த ரயில்கள் சனிக்கிழமை தொடங்கப்பட்டாலும் செப்.2ம் தேதி முதல் தான் வழக்கமான கால அட்டவணையின்படி இயக்கப்படும்.
கட்டண விவரம்: எழும்பூரிலிருந்து நாகா்கோவில் செல்ல இருக்கை வசதி கொண்ட குளிா்சாதனப் பெட்டியில் பயணிக்க (ஏசி சோ் காா்) நபா் ஒருவருக்கு ரூ.1,760, சொகுசு பெட்டியில் பயணிக்க (எக்ஸிகியூட்டிவ் சோ் காா்) நபா் ஒருவருக்கு ரூ.3,240 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மறுமாா்க்கமாக ஏசி சோ் காா் இருக்கைக்கு ரூ.1,735, எக்ஸிகியூட்டிவ் சோ் காா் இருக்கைக்கு ரூ.3,220 கட்டணம் நிா்ணயக்கப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து பெங்களூரு செல்ல ஏசி சோ் காா் இருக்கைக்கு ரூ.1,575, சொகுசு பெட்டி இருக்கைக்கு ரூ.2,865 கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறுமாா்க்கமாக ஏசி சோ் காா் இருக்கைக்கு ரூ.1,740, சொகுசு பெட்டி இருக்கைக்கு ரூ.3,060 கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தில் உணவு மற்றும் சிற்றுண்டிக்கான கட்டணங்களும் உள்ளடங்கும்.
நேர அட்டவணை: எழும்பூர்- நாகர்கோவில் ரயில் காலை 5 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக இந்த ரயில் (எண் 20628) நாகர்கோவிலிருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும். மதுரை - பெங்களூர் ரயில் (எண் 20671) காலை 5.15 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக இந்த ரயில் (எண் 20672) பெங்களூரிலிருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும். இந்த ரயில் இரு மார்க்கத்திலும் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் இயக்கப்படும்.
வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்கு முன்னர் பேசிய மோடி, “வளர்ச்சியடைந்த இந்தியா எனும் தொலை நோக்கு பார்வையை நனவாக்க, தென் மாநிலங்களின் வளர்ச்சியை மேம்படுத்துவது அவசியமாகிறது. தென் மாநிலங்கள், திறமை, வளர்ச்சி மற்றும் வளம் ஆகியவற்றால் ஆசீர்வாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் தமிழகத்துக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ரயில்வே பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்துள்ளோம். இது கடந்த 2014ல் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட 7 மடங்கு அதிகமாகும்.
இந்த மூன்று புதிய வந்தே பாரத் ரயில்கள் முக்கியமான மற்றும் வரலாற்று நகரங்களை இணைக்கும். கோவில் நகரமான மதுரையை, தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூருடன் இணைக்கப்படும்” என்று கூறினார்.












Click it and Unblock the Notifications