தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நல்ல ஜாதி பின்னணி உள்ளது.. பிரதமர் மோடி கருத்தால் வெடிக்கும் சர்ச்சை!
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நல்ல "ஜாதி பின்னணி" உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்த கருத்தால் சமூக வலைதளங்களில் விவாதம் அனல் பறக்கிறது.
லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டின் தந்தி டிவி சேனலுக்கு பிரதமர் மோடி சிறப்பு நேர்காணல் வழங்கினார். இந்தப் பேட்டியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பாஜக, ஜன சங்கத்தின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டுதான் செயல்படுகிறது. தமிழ்நாடு பாஜகவில் பல தலைமுறை தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

தற்போது அண்ணாமலையும் தமிழ்நாடு பாஜகவில் பணியாற்றுகிறார். தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கக் கூடியவராக இருக்கிறார் அண்ணாமலை. குறிப்பாக இளைஞர்களிடம் கவனம் பெற்றவராக இருக்கிறார் அண்ணாமலை.
நல்ல போலீஸ் அதிகாரி வேலையை உதறிவிட்டு பாஜகவில் கட்சிப் பணியாற்ற இணைந்தவர் அண்ணாமலை. அவருக்கு நல்ல ஜாதிப் பின்னணியும் உள்ளது. சிறப்பான உழைப்பாளி அண்ணாமலை. ஆனால் அரசியலில் சம்பாதிக்க வேண்டும் என நினைத்திருந்தால் திமுகவில்தான் சேர்ந்திருப்பார். ஆனால் மக்களுக்காக பாடுபட பாஜகவில் இணைந்துள்ளார். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
மேலும் அண்ணா திமுகவைப் பற்றிக் குறிப்பிடும் போது, கூட்டணியில் இல்லையே என்ற வருத்தம் அண்ணா திமுகவுக்குதான் இருக்க வேண்டும். அண்ணா திமுக கூட்டணியில் இல்லை என்கிற வருத்தம் பாஜகவுக்கு எப்போதும் இல்லை. ஜெயலலிதாவின் கனவுகளை சிதைக்கிற பாவத்தை செய்கிறவர்கள்தான் இதற்கு வருத்தப்பட வேண்டும். பாஜகவினர் வருந்துவதற்கு ஒரு காரணமுமே இல்லை என்றும் பிரதமர் மோடி விளக்கம் தந்தார்.
அண்ணாமலையைக் குறிப்பிடும் போது, அவருக்கு நல்ல ஜாதிப் பின்னணி இருக்கிறது என நாட்டின் பிரதமரான மோடியே குறிப்பிடுவது தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரியதாக வெடித்துள்ளது. அதேநேரத்தில் ஜாதி பின்புலம் இருந்தும் பாஜகவில் உழைக்கத்தான் அண்ணாமலை வந்துள்ளார்; இல்லையெனில் திமுக, அதிமுகவுக்கு போயிருக்கலாம் என்றுதான் மோடி பேசினார் என பாஜக ஆதரவாளர்கள் தரப்பும் விளக்கம் தந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications