பாம்பன் பாலம் திறப்புக்காக பிரதமர் மோடி வருகை- 3 நாட்கள் மீன்பிடிக்க மீனவர்களுக்கு தடை!
சென்னை: பாம்பன் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி வருகை தருவதால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் நாளை மறுநாள் ஏப்ரல் 4-ந் தேதி முதல் ஏப்ரல் 6-ந் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி வரும் 5-ந் தேதி இலங்கை பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, ராமேஸ்வரம் பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே பாலத்தைத் திறந்து வைக்க உள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் மண்டபத்தையும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கக் கூடியதுதான் பாம்பன் ரயில்வே பாலம். இது மொத்தம் 2.2 கிலோ மீட்டர் தொலைவாகும். பாம்பன் ரயில்வே பாலம் ஆங்கிலேயர் ஆட்சியில் 1914-ம் ஆண்டு கட்டப்பட்டது.
பாம்பன் ரயில்வே பாலம் கட்டி 106 ஆண்டுகள் கடந்த நிலையில் அதன் உறுதித்தன்மையும் குறைந்தது. இதனையடுத்து 2019-ம் ஆண்டு மண்டபம்- பாம்பன் இடையே புதிய ரயில்வே பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கின. ரூ550 கோடியில் கட்டப்பட்ட புதிய பாம்பன் ரயில்வே பாலத்தின் அனைத்து பணிகளும் கடந்த ஆண்டு நிறைவடைந்தன. இதனைத் தொடர்ந்து பாம்பன் பாலத்தில் ரயில்கள் சோதனை ஓட்டமாக இயக்கப்பட்டன. பாம்பன் தூக்கு பாலம் இயக்கப்பட்டு கப்பல்களும் இயக்கப்பட்டன.
பிரதமர் நரேந்திர மோடியால் இந்த பாலம் திறந்து வைக்கப்பட வேண்டும் என்பதற்காக பல முறை திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஏப்ரல் 5-ந் தேதி இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 6-ந் தேதி ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தை திறந்து வைக்க உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, பாம்பன் பாலத்தை திறந்து வைக்க வருகை தருவதால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ராமேஸ்வரன், பாம்பன் மீனவர்கள் ஏப்ரல் 4-ந் தேதி முதல் ஏப்ரல் 6-ந் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல பாம்பன் பால பகுதியில் நிறுத்தப்பட்ட மீன்பிடி படகுகள் வேறு பகுதிக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications