ஜனவரி 23 ல் மதுரையில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் அதிமுக- பாஜக பொதுக் கூட்டம் சென்னைக்கு மாற்றம்!
சென்னை: என்டிஏ கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஜனவரி 23 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் மதுரை வருகை தற்போது சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 23ஆம் தேதி மதுரையில் நடைபெறும் பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அவர் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனமும் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், வலுவான கூட்டணியுடன் தி.மு.க தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. பா.ஜ.கவும் தனது கூட்டணியை பலப்படுத்த முயற்சிக்கிறது.
ஜனவரி 28 அன்று கன்னியாகுமரியில் கூட்டணி கட்சிகளுடன் மோடியின் பங்கேற்பை பா.ஜ.க திட்டமிட்டிருந்தது. ஆனால், ஜனவரி 23 அன்று மதுரை வண்டியூர் ரிங் ரோட்டில் பா.ஜ.க சார்பில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்திற்கு அனுமதி கோரி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க, அ.தி.மு.க நிர்வாகிகள் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம், ''சித்திரைத் திருவிழா மாதிரி, பிரதமர் மோடி வருகை தரும் ஜனவரி 23ம் தேதி மற்றொரு சித்திரைத் திருவிழாவாக இருக்கும்'' என்றார்.
பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் கூறுகையில், ''பா.ஜ.க, அ.தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் இதில் பங்கேற்பர். புதிய கட்சிகளும் இணைய வாய்ப்பிருக்கிறது'' என்றார்.
மதுரை கூட்டத்திற்கு வரும் பிரதமர் மோடி, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தரிசனம் செய்வார் என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் தற்போது பிரதமர் மோடியின் மதுரை வருகை சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications