"எப்போதும்போல் ஆச்சரியமூட்டி.. அன்பை பொழிந்துள்ள சென்னையே! அகமகிழ்ந்தேன்!" பிரதமர் மோடி நெகிழ்ச்சி
சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடருக்கு தனக்குக் கிடைத்த வரவேற்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் முதல்முறையாகச் சென்னை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் சுமார் இரண்டாயிரம் வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர்
இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகள் நேரலையிலும் ஒளிபரப்பப்பட உள்ளது.

செஸ் ஒலிம்பியாட்
செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சி இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார். குஜராத்தில் இருந்து மாலை 5 மணிக்குப் பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார். அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டரில் அடையாறு ஐஎன்எஸ் கடற்கரை தளத்திற்கு வந்தார்.

கோலாகல வரவேற்பு
அங்கிருந்து சாலை மார்க்கமாகப் பிரதமர் நரேந்திர மோடி நேரு ஸ்டேடியம் வந்தடைந்தார். பிரதமர் நரேந்திர மோடி வரும் வழி முழுவதும் கூடியிருந்த பாஜக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தன்னை வரவேற்கக் கூடியிருந்த பாஜகவினரை, பார்த்து கை அசைத்தபடி உற்சாகமாகப் பிரதமர் மோடி நேரு ஸ்டேடியம் வந்தடைந்தார். அங்கும் அவருக்கு கோலாகல வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பிரதமர் மோடி
இந்த நிகழ்ச்சியில் மாமல்லபுரம் கற்கோவில் சிற்பத்தைப் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நினைவுப்பரிசாக வழங்கினார். அதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தமிழகம் வலிமையான கலாச்சார பெருமைகளைக் கொண்டது என்றும் பல கிராண்ட் மாஸ்டர்களை தமிழகம் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை அவர் தொடங்கி வைத்தார்.

அகமகிழ்ந்தேன்
தொடக்க விழாவுக்குப் பின்னர், பிரதமர் நரேந்திர மோடி ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். இன்று அவர் அங்கேயே ஓய்வெடுக்கிறார். இதற்கிடையே பிரதமர் மோடி தனது சென்னை பயணம் குறித்து ட்விட்டரில், "எப்போதும்போல் ஆச்சரியமூட்டி அன்பைப் பொழிந்துள்ள சென்னையே, அற்புதமான வரவேற்பால் அகமகிழ்ந்தேன்!" என்று பதிவிட்டுள்ளார். மேலும், சென்னையில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்த படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

சென்னை
மாமல்லபுரத்தில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்பட உள்ளது. இந்த செஸ் ஒலிம்பியாட் முதலில் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடைபெற இருந்தது. இருப்பினும், உக்ரைன் போர் காரணமாக அங்கிருந்து போட்டிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் சென்னை இந்தப் போட்டியின் வாய்ப்பை பெற்றது. வெறும் 4 மாதங்களில் இதற்கான ஏற்பாடு பணிகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications