கீழ்வேளூரில் வடிவேல் ராவணன், அம்பத்தூரில் சேகர்.. பாமகவின் 3 வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் பாமக சார்பாக போட்டியிடும் 3 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை அக்கட்சியின் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ளார். அதன்படி கீழ்வேளூர் தொகுதியில் வடிவேல் இராவணன், அம்பத்தூர் தொகுதியில் கே.என். சேகர், செஞ்சி தொகுதியில் அ.கணேஷ் குமார் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாமக இணைந்து போட்டியிடுகிறது. பாமகவுக்கு 18 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ராஜ்ய சபா சீட்டில் அன்புமணி எம்பியாகிவிட்டார். இதையடுத்து பாமக போட்டியிடும் தொகுதிகளை எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார்.

அதன்படி பாமகவுக்கு சேலம் மேற்கு, தர்மபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், செஞ்சி, விருத்தாசலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோயில், கீழ்வேளூர்(தனி), பெரம்பூர், சேலம் வடக்கு மற்றும் அம்பத்தூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாமகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ளார். அதன்படி கீழ்வேளூர் தொகுதியில் வடிவேல் இராவணன், அம்பத்தூர் தொகுதியில் கே.என். சேகர், செஞ்சி தொகுதியில் அ.கணேஷ் குமார் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீழ்வேளூர் தொகுதியில் மீண்டும் வடிவேல் ராவணனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
2021 சட்டசபைத் தேர்தலில் கீழ்வேளூர் தொகுதியில் பாமக சார்பாக போட்டியிட்ட வடிவேல் ராவணன், சிபிஎம் வேட்பாளர் நாகை மாலியிடம் சுமார் 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதேபோல் செஞ்சி தொகுதியில் கடந்த முறையும் பாமக தான் போட்டியிட்டது. திமுக சார்பாக போட்டியிட்ட செஞ்சி மஸ்தானை எதிர்த்து பாமக சார்பாக ராஜேந்திரன் போட்டியிட்டார்.
சுமார் 36 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராஜேந்திரன் தோல்வி அடைந்தார். இதனால் இம்முறை செஞ்சி தொகுதியில் கணேஷ் குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அம்பத்தூர் தொகுதியில் கடந்த முறை திமுக மற்றும் அதிமுக நேருக்கு நேர் மோதியது. இம்முறை பாமக நேரடியாக களம் காண்கிறது.












Click it and Unblock the Notifications