துரைமுருகன் எழுந்தாரு.. ஆளுநர் போறாரு.. ஆர்.என்.ரவியின் செயல் ஏற்க முடியாதது.. அன்புமணி தாக்கு
சென்னை: தமிழக அரசு - ஆளுநர் மோதல் தொடரக்கூடாது, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்தக் கூடாது! என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை தொடங்கி வைப்பதற்காக வந்த தமிழக ஆளுனர் ஆர்.என்.இரவி, அவருக்காக தயாரிக்கப்பட்ட உரையை படிக்க மறுத்திருக்கிறார். ஆளுனர் உரைக்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்படாததை கண்டித்தும், ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள பல பகுதிகளில் தமக்கு உடன்பாடு இல்லை என்பதாலும் உரையை படிக்கவில்லை என்று ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார்.

அதுமட்டுமின்றி, ஆளுநரின் உரையை முழுமையாக அவைக்குறிப்பில் ஏற்றுவதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவையிலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறார். ஆளுநரின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது.
கடந்த ஆண்டு ஆளுநர் உரையின் போது அவையில் என்னென்ன நிகழ்வுகள் நடந்தனவோ, அதே தான் இப்போதும் தொடர்ந்திருக்கின்றன. தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட ஆளுநர் உரைக்கு அவரது அலுவலகம் ஏற்கனவே ஒப்புதல் அளித்திருக்கிறது. அதேபோல், ஆளுநர் உரைக்கு முன் தேசிய கீதம் இசைப்பது தமிழக மரபல்ல என்று ஆளுநர் அலுவலகத்திற்கு தமிழக சட்டப்பேரவைச் செயலகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
அதன் பிறகு அவையில் உரையை வாசிக்காததும் வெளிநடப்பு செய்ததும் நியாயப்படுத்த முடியாதவை. தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான மோதல் புதிதல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே இத்தகைய மோதல் தொடர்ந்து வருகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக அரசும் ஆளுனரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசும் ஆளுநரும் நிர்வாகம் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள்.
அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதல்ல. இப்போக்கு தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உருவாகிவிடும். இனியாவது இரு தரப்பும் நடந்ததை மறந்து தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆளுநரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும்! இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில் சட்டசபையின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என தொடர்ச்சியாக நான் வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. அரசு தயாரித்த உரையில் இடம் பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன.
இத்தகைய உரைக்கு நான் குரல் கொடுப்பது அரசியலமைப்பை கேலிக் கூத்தாகும் செயலாகிவிடும் என்பதால் இத்துடன் எனது உரையை முடித்துக் கொள்கிறேன். வாழ்க தமிழகம், வெல்க பாரதம்.. நன்றி என ஆளுநர் தெரிவித்தார். அதாவது தமிழக அரசு எழுதி கொடுத்த உரையை முழுவதுமாக படிக்காமல் அவர் புறக்கணித்தார். இந்த செயலைத்தான் திமுக, கூட்டணி கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அந்த வகையில் பாமகவும் விமர்சித்துள்ளது. அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் இல்லாவிட்டாலும் ஆளுநர் உரையை படிக்காதது குறித்தும் அவர் நாட்டுப்பண் இசைப்பதற்கு முன்பே எழுந்து வெளியே சென்றது குறித்தும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதையும் விமர்சிக்காமல் இது ஆளுநருக்கும் அரசுக்கும் இருக்கும் பிரச்சினை, அவர்களிடம்தான் கேட்க வேண்டும் என மழுப்பலான பதிலை கூறிவிட்டார்.












Click it and Unblock the Notifications