சிங்கள கடற்படை அட்டூழியம்.. கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுங்க.. மத்திய அரசுக்கு, அன்புமணி கோரிக்கை!
சென்னை: ராமேசுவரம் பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மன்னார் வளைகுடா அருகே நடுக்கடலில் இந்திய எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.
நல்லவேளையாக இந்த சம்பவத்தில் 9 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இந்த நிலையில் இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூட்டுக்கு பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:- வங்கக்கடலில் கச்சத்தீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. சிங்களப் படையினரின் இத்தகைய அத்துமீறலை மத்திய அரசு இனியும் பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது!
சிங்களப் படையினரின் தாக்குதலில் நல்வாய்ப்பாக 9 மீனவர்களும் காயமின்றி உயிர் தப்பி விட்டாலும் அவர்களின் படகு சேதமடைந்து விட்டது. சிங்களப் படையினரின் இந்த செயலை இந்திய அரசு கண்டிப்பதுடன், சேதமடைந்த படகு உரிமையாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் தமிழக மீனவர்கள் மீதான சிங்களப் படையினரின் தாக்குதலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.