’பொன்னி நதி பாக்கனுமே’ மோடில் அன்புமணி! அடுத்து ’ஆப்பரேசன் அரியலூர்’! பாமக போடும் பலே திட்டம்!
சென்னை : அரியலூர் - சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கீழப்பழுவூர் முதல் காட்டுமன்னார்கோயில் இந்த மாத இறுதியில் அதாவது 29, 30 ஆகிய தேதிகளில் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
தருமபுரி காவேரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் மூன்று நாள் நடைபயணம் பிரச்சாரத்தை பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஒகேனக்கலில் தொடங்கினார்.
பிரச்சாரம் தொடங்கியதில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியினரும், பொது மக்களும் உற்சாக வரவேற்பை அளித்துள்ள நிலையில், வ்வொரு இடமாக நடந்து சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் அன்புமணி ஈடுபட்டார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அன்புமணி ராமதாஸ்
இதனையடுத்து அடுத்த கட்ட திட்டமாக அரியலூர் - சோழர் பாசனத் திட்டம் செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் கீழப்பழுவூர் முதல் காட்டுமன்னார்கோயில் இந்த மாத இறுதியில் அதாவது 29, 30 ஆகிய தேதிகளில் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை பாமகவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தையும், அரியலூர் மாவட்டத்தையும் பிரிப்பது கொள்ளிடம் ஆறு தான். ஆனால், தஞ்சை மாவட்டம் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்... அரியலூர் மாவட்டமோ வறண்ட பூமி. கொள்ளிடம் ஆற்று நீரைக் கொண்டு அரியலூர் போன்று 10 மாவட்டங்களுக்கு பாசன வசதியை ஏற்படுத்தித் தர முடியும்.

அரியலூர் பாசன திட்டம்
அதுமட்டுமல்ல... அரியலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 97 ஏரிகள், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் 482 ஏரிகள், ஊரக உள்ளாட்சிகளில் 49 ஏரிகள், நகர்ப்புற உள்ளாட்சிகளில் 4 ஏரிகள் என மொத்தம் 632 ஏரிகள் உள்ளன. கொள்ளிடம், மருதையாறு என இரு ஆறுகள் பாய்கின்றன. ஆனாலும், கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைபவர்களைப் போல, இவ்வளவு நீர் வளத்தை வைத்துக் கொண்டு பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் வேலை தேடி அலையும் நிலை தான் நிலவுகிறது. இத்தனைக்கும் காரணம் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசன கட்டமைப்புகள் பாதுகாக்கப்படாமல் சீரழிக்கப்பட்டது தான். அப்போது சீரழிக்கப்பட்டதை இப்போது மீட்டெடுப்பதன் மூலம் தான் அரியலூர் மாவட்டத்தை மீண்டும் வளம் கொழிக்கும் பூமியாக மாற்ற முடியும்.

சோழர் காலம்
சோழர் காலத்து சாதனைகளில் ஒன்று சோழகங்கம் எனப்படும் பொன்னேரி . கங்கை கொண்ட சோழபுரத்தை சோழ நாட்டின் தலைநகரமாக உருவாக்கிய இராஜேந்திர சோழன், கி.பி 11-ஆம் நூற்றாண்டில் அப்பகுதியின் பாசனத் தேவைக்காக அமைத்தார். சோழகங்கம் ஏரி 16 மைல் நீளமும், 3 மைல் அகலமும் கொண்டது. 0.114 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட இந்த ஏரி 2,000 ஏக்கருக்கு பாசன ஆதாரமாகும். கொள்ளிடம், வெள்ளாறு ஆகிய இரு ஆறுகளில் இருந்தும் இந்த ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர கால்வாய்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அரியலூர் - சோழர் பாசனத் திட்டம்
சோழ மன்னர்களின் தொலைநோக்கு மிக நீண்டதாகும். கொள்ளிடம் ஆற்றின் நீரை அரியலூர் மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் நிரப்ப கால்வாய் அமைத்திருந்தனர். பெரிய ஏரிகளின் உபரி நீர் சிறிய ஏரிகளுக்கு சென்று நிரம்பவும் இணைப்பு பாதைகளை அவர்கள் உருவாக்கியிருந்தனர். பொன்னேரியும், வீராணம் ஏரியும் வெவ்வேறு காலங்களில் கட்டப்பட்டிருந்தாலும் பொன்னேரியின் உபரி நீர் வீராணம் ஏரிக்கு செல்ல இணைப்புப் பாதையை அமைத்திருந்தார் இராஜேந்திரசோழன். ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரை சரியாக பராமரிக்கப்பட்ட இந்த பாசனக் கட்டமைப்புகள் பின்னர் கண்டுகொள்ளாமல் விடப்பட்டதால் அவை பயனற்று போய்விட்டன என்கின்றனர் பாமகவினர்

திட்டம் சாத்தியமா?
அரியலூர் - சோழர் கால பாசனத் திட்டம் சாத்தியமா? என கேள்விகள் எழுப்பப்படும் நிலையில், சாத்தியம் தான். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1922-ஆம் ஆண்டு வாக்கில் சோழர் கால பாசன கட்டமைப்புகளை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. நீர் கொண்டு செல்லும் கால்வாய்களின் பாதைகள் அடையாளம் காணப்பட்டு வரைபடம் தயாரிக்கப்பட்டது. ஆனால், அம்முயற்சி கைவிடப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கால திட்டத்தில் இன்றைய சூழலுக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து சோழர் கால பாசனக் கட்டமைப்புகளை மீட்டெடுக்க முடியும் எனவும் கூறுகின்றனர்.

அன்புமணி அழைப்பு
அரியலூர் - சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் அரியலூர் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொள்கிறார். கீழப்பழுவூரில் வரும் 29ஆம் தேதி சனிக்கிழமை காலை தொடங்கும் நடைபயணம் ஞாயிறு மாலை காட்டுமன்னார் கோயிலில் நிறைவடையும். அரியலூர் - சோழர் கால பாசனத் திட்டளும் நிலையில், அரசியல் நிலைகளை கடந்து, அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் என அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்












Click it and Unblock the Notifications