ஸ்டாலினால் குற்றஞ்சாட்டப்பட்ட நிறுவனத்துடன் காவல்துறை ஒப்பந்தம் - ரத்து செய்ய அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் ஊழல், மோசடி நிறுவனம் என்று குற்றஞ்சாட்டப்பட்ட அப்பல்லோ பயிற்சி நிறுவனத்துடன், அவரது ஆட்சியிலேயே, அந்த நிறுவனத்தில் சோதனை நடத்திய காவல்துறையே ஒப்பந்தம் செய்வது ஊழலுக்கு அளிக்கப்படும் அங்கீகாரமாக அமைந்துவிடாதா? என மாநிலங்களவை உறுப்பினரும், பாமக இளைஞரணி தலைவருமாகிய அன்பு மணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவல்துறையினரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக சென்னை அப்பல்லோ பயிற்சி நிறுவனத்துடன் காவல்துறை தலைமை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
ஸ்டாலின் டீ குடிக்கச் சொன்னார்! துரைமுருகன் அன்பாக பேசினார்! சிரித்த முகத்துடன் வந்த K.s.அழகிரி!
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அப்போலோ நிறுவனம் மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாகவும், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு மோசடியில் அந்நிறுவனத்திற்கு தொடர்பு இருப்பதாக தற்போது முதலமைச்சரும் திமுக தலைவருமாகிய மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
அப்பல்லோ நிறுவனம்
மோசடி நிறுவனத்தில் சோதனை நடத்திய அதே நிறுவனத்தில் காவல்துறையே ஒப்பந்தம் செய்வது ஊழலுக்கு அளிக்கப்படும் அங்கீகாரமாக அமைந்துவிடாதா என மாநிலங்களவை உறுப்பினரும், பாமக இளைஞரணி தலைவருமாகிய அன்பு மணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், காவல்துறையினரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக சென்னை அப்பல்லோ பயிற்சி நிறுவனத்துடன் காவல்துறை தலைமை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது என பதிவிட்டுள்ள அன்புமணி காவல்துறையின் நோக்கம் சரியானது எனவும் பயிற்சி நிறுவனத் தேர்வு மிகவும் தவறானது என குறிப்பிட்டுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி மோசடி
மேலும் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 2016ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு மோசடியில் அப்பல்லோ பயிற்சி நிறுவனத்துக்கு தொடர்பு உள்ளது எனவும், மோசடி குறித்து 28.06.2017 மற்றும் 01.07.2017 ஆகிய தேதிகளில் இதை பாட்டாளி மக்கள் கட்சி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது என குறிப்பிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், ஊழல் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி 01.07.2017 பா.ம.க. போராட்டம் நடத்தியது என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.
ஸ்டாலின் அறிக்கை
டிஎன்பிஎஸ்சி ஊழல் குறித்து பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அதில் அப்பல்லோ பயிற்சி நிறுவனத்தில் மத்தியக்குற்றப்பிரிவு காவல்துறை 18.01.2018-இல் சோதனை நடத்தியது என சுட்டிக் காட்டியுள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், அப்பல்லோ நிறுவனம் மீது நடவடிக்கை கோரி 07.02.2020 ஆம் ஆண்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டதையும் குறிப்பிட்டுள்ளார்.
ரத்து செய்ய வேண்டும்
மு.க.ஸ்டாலின் அவர்களால் ஊழல், மோசடி நிறுவனம் என்று குற்றஞ்சாட்டப்பட்ட அப்பல்லோ பயிற்சி நிறுவனத்துடன், அவரது ஆட்சியிலேயே, அந்த நிறுவனத்தில் சோதனை நடத்திய காவல்துறையே ஒப்பந்தம் செய்வது ஊழலுக்கு அளிக்கப்படும் அங்கீகாரமாக அமைந்துவிடாதா என கேள்வி எழுப்பியுள்ள அன்புமணி ராமதாஸ், தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் அப்பல்லோ நிறுவனத்தின் மீதான வழக்கு விசாரணைகள் நீர்த்துப் போகக்கூடும் எனவும், அதற்கு இடம் தராத வகையில், அப்பல்லோ பயிற்சி நிறுவனத்துடன் காவல்துறை செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.