முதல்வர் நல்லா பேசுனாரு! "கடிதத்தோடு" தலைமைச்செயலகம் பறந்த அன்புமணி டீம்.. ஸ்டாலினுடன் மீட்.. ஏன்?
சென்னை: முதல்வர் ஸ்டாலினுடன் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாஜக குழு இன்று தலைமைச் செயலகத்தில் சந்திப்பு நடத்தியது.
வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு செல்லாது. இதில் தமிழ்நாடு அரசு போதிய புள்ளி விவரங்களை வழங்கவில்லை என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியிருந்தது. அதிமுக அரசு வலுவான சட்டத்தை கொண்டு வராததுதான் இதற்கு காரணம் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்து செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் முதல்வர் ஸ்டாலினுடன் அன்புமணி ராமதாஸ் பாமக தலைமையிலான குழு சந்திப்பு நடத்தியது. இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடம் நீடித்தது.

உள் ஒதுக்கீடு
இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், என்னுடைய தலைமையில் கட்சி தலைவர் ஜி கே மணி மற்றும் 7 பேர் அடங்கிய குழு இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்தோம். வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் இருக்கும் விஷயங்களை குறிப்பிட்டோம். அதில் வன்னியர்களுக்கு சில விஷயங்கள் சாதகமாக உள்ளது. அதை குறிப்பிட்டு இந்த சந்திப்பில் பேசினோம். இந்த சந்திப்பு நன்றாக இருந்தது.

அன்புமணி ராமதாஸ்
விரைவில் மீண்டும் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டம் இயற்ற கோரிக்கை வைத்தோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பில் மிக தெளிவாக வன்னியர்களுக்கு தனியாக இடஒதுக்கீடு கொடுக்கலாம். அதில் தடை இல்லை. ஆனால் அதை நியாயப்படுத்த வேண்டும். புள்ளி விவரங்களை கொடுக்க வேண்டும் என்று தெளிவாக கூறி உள்ளது. அதேபோல் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாக கூறியுள்ளனர்.

பாமக நிலைப்பாடு
இதற்கு சட்ட திருத்தம் தேவை இல்லை என்று கூறியுள்ளனர். இவை எல்லாம் நமக்கு சாதகமான அம்சங்கள். அவர்கள் புள்ளி விவரங்களை கேட்டு உள்ளனர். எனவே புள்ளி விவரங்களை பெற்று அதை வைத்து மீண்டு சட்டம் இயற்ற வேண்டும். இதை பற்றி முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம். நல்ல முடிவு எடுப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.நாங்கள் இப்போது எதுவும் புள்ளி விவரங்களை கொடுக்கவில்லை.

அன்புமணி ராமதாஸ் பேட்டி
நிறுவனர் ராமதாஸ் கொடுத்த கடிதம் ஒன்றை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்தோம். தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் நன்றாகவே வாதம் வைத்தது. உச்ச நீதிமன்றத்தில் டாப் வழக்கறிஞர்களை வைத்துதான் வாதம் செய்தனர். தமிழ்நாடு அரசு இதில் சிறப்பாகவே செயல்பட்டது. வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு பிரச்னையில், சட்ட வல்லுனர்களுடன் உரிய ஆலோசனை செய்வோம். நிச்சயம் சமூக நீதி நிலைநாட்டப்படும், என்று முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறார்.

ஸ்டாலின் பேச்சு
முதல்வர் ஸ்டாலின் நன்றாகத்தான் பேசி இருக்கிறார். இது ஒரு ஜாதி பிரச்சனை இல்லை. இது சமூக நீதி பிரச்சனை. யாருக்கும் எதிரான, பாதகமான இடஒதுக்கீடு கிடையாது. எந்த சமுதாயம் பின் தங்கி இருக்கிறதோ அவர்களை முன்னுக்கு கொண்டு வர வேண்டும். அந்த கடமையைத்தான் நாங்கள் கோரிக்கையாக வைத்து இருக்கிறோம். எனக்கு இந்த சந்திப்பு திருப்தியாக இருந்தது, என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications