அமெரிக்காவிலிருந்து ராமதாஸை பார்க்க வந்த தொண்டர்! பாமக பொதுக்குழு ருசிகரம்!
சென்னை: கடந்த மாதம் அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு தொண்டர் தன்னை சந்தித்து பேசியது குறித்து பாமக சிறப்பு பொதுக்குழுவில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார் ராமதாஸ்.
நாடாளுமன்றத் தேர்தலில் சரியான கூட்டணி அமைப்பேன் என்று உறுதியளித்த அவர், வெற்றிப்பாதைக்கு பாமகவை அழைத்துச்செல்வேன் எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே பாமக சிறப்பு பொதுக்குழுவில் ராமதாஸ் பேசியதாவது:

''மக்கள் மனங்களில் நான் வாழ்கிறேன். அதை விட சிறந்த விருது இவ்வுலகத்தில் எதுவுமில்லை. என்னை மனித நேயர், மக்கள் காவலர் என்று சொல்கிறீர்கள். இதை விடவா பாரத ரத்னா விருது உயர்ந்தது? கடந்த மாதம் அமெரிக்காவிலிருந்து வந்த தொண்டர் ஒருவர், நீங்கள் பெற்றுக் கொடுத்த எம்.பி.சி இட ஒதுக்கீட்டால் இன்று நான் நன்றாக படித்து நல்ல நிலையில் உள்ளேன், லட்சங்களில் சம்பாதிக்கிறேன் எனத் தெரிவித்தார்.''
''என் ஆயுளில் பாதியை உங்களுக்கு கொடுக்க விருப்பப்படுகிறேன் என்றெல்லாம் அமெரிக்காவிலிருந்து வந்த அந்த தொண்டர் மகிழ்ச்சியோடு பேசினார். இதைவிட சிறந்த பாராட்டும், விருதும் வேறு எதுவும் எனக்கு வேண்டாம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சரியான கூட்டணி அமைப்பேன். வெற்றிப் பாதைக்கு பாமகவை அழைத்துச் செல்வேன்.'' இவ்வாறு அவர் பேசினார்.
பாஜகவுடன் பாமக கூட்டணி வைப்பதற்கு வாய்ப்பு அதிகம் எனக் கூறப்பட்டாலும், திமுக, அதிமுகவும் பாமகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம் என்று மட்டும் அறிவித்துள்ள ராமதாஸ் யாருடன் கூட்டணி, எத்தனை இடங்களில் போட்டி என்பது பற்றியெல்லாம் பொதுக்குழுவில் பேசவில்லை.
7 தொகுதிகளில் பாமக போட்டியிடக் கூடும் என்றும் அதையொட்டி கூட்டணி பேச்சுவார்த்தையை வரும் நாட்களில் அக்கட்சி தொடங்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications