33-வது ஆண்டு விழா: ஆள்பவர்களின் கட்சியாக பா.ம.க. மாறுவதே அடுத்த இலக்கு: டாக்டர் ராமதாஸ்
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி ஆள்பவர்களின் கட்சியாக மாறுவதே அடுத்த இலக்கு என்று அக்கட்சியின் 33-வது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிட்ட செய்தியில் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பாட்டாளி மக்கள் கட்சி அரசியல் களத்தில் 32 ஆண்டுகள் பயணித்து 33-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பா.ம.க.வின் வெற்றிகளுக்கும், சாதனைகளுக்கும் அடிப்படைக் காரணமான பாட்டாளி சொந்தங்களுக்கும் இந்த நாளில் எனது வாழ்த்துகள். இனி வெற்றி நமதே!

ஆள்பவர் கட்சியாக மாறுவது?
பா.ம.க. போராளிகளின் கட்சி; பா.ம.க. சாதனைகளின் கட்சி; மக்களின் நலனுக்காக பாமக சாத்தியமாக்கிய திட்டங்களும், முறியடித்த அநீதிகளும் ஏராளம். ஆனாலும் ஆள்பவர்களின் கட்சியாக பா.ம.க. மாறுவது எப்போது? நமது அடுத்த இலக்கு அதுவாகவே இருக்கட்டும்! இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

அன்புமணி ட்வீட்
பா.ம.க. இளைஞரணித் தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளதாவது; பாட்டாளி மக்கள் கட்சி 33-ஆவது நிறுவன நாளை கொண்டாடும் இந்த வேளையில் மருத்துவர் அய்யா அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி சமூகநீதிப்பாதையில் பயணிக்கும் பா.ம.க. நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள், வாக்காளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.... நன்றிகள்!

ஏராளமான நன்மைகள்
பா.ம.க. 32 ஆண்டுகளில் மக்களுக்கு செய்த நன்மைகள் ஏராளம். ஆனாலும் நாம் இலக்கை அடைய செல்ல வேண்டிய தொலைவு அதிகம். அதற்கேற்ப நமது பயணத்தின் வேகத்தை விரைவுபடுத்துவோம். அய்யாவின் கனவை நனவாக்க நான் உங்களை வழி நடத்துவேன். இனி வெற்றி நமதே! இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக சாதனைகள்
சமூக வலைதளங்களில் #33YearsOfPMK என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்காகி வருகிறது. இதில், பொது இடங்களில் புகைபிடிக்க தடை சட்டம் கொண்டு வந்தது பாமக என்பது உள்ளிட்ட அக்கட்சியின் சாதனைகள், போராட்டங்கள் குறித்து பதிவிடப்பட்டு வருகின்றன.

கொண்டாட்டங்கள்
முன்னதாக ராமதாஸ் நேற்று கட்சி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், உங்களால்தான் பா.ம.க. துடிப்பாக இயங்குகிறது.வழக்கமாக பா.ம.க. ஆண்டு விழா நாளில் கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சிகளும், பொதுக்கூட்டங்களும் அதிக அளவில் நடைபெறும். ஆனால், இப்போது அதற்கு வாய்ப்பில்லாத சூழலில், வாய்ப்புள்ள பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் கொரோனா நோய்ப்பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து தங்களின் வீடுகளில் கொடியேற்றி 33-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறேன் என கேட்டுக் கொண்டிருந்தார்.












Click it and Unblock the Notifications